திருக்குறளை அவமதித்ததாக கவர்னரை கண்டித்து போராட்டம் - பழநெடுமாறன் உட்பட 100 பேர் கைது


திருக்குறளை அவமதித்ததாக கவர்னரை கண்டித்து போராட்டம் - பழநெடுமாறன் உட்பட 100 பேர் கைது
x

சென்னையில் பழநெடுமாறன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் தமிழக கவர்னரை கண்டித்து போராட்டம் நடத்தினர்.

சென்னை,

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருக்குறள் குறித்து பேசினார். அவர் திருக்குறளை அவமதித்ததாக குற்றம்சாட்டி பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். திருக்குறளை அவமதித்த கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ் அமைப்புகள் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இன்று காலை கவர்னர் ஆர்.என். ரவியை கண்டித்து சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு பழநெடுமாறன் தலைமையில் ஏராளமானோர் திரண்டனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழகருப்பையா எம்.ஜி.கே. நிஜாமுதீன், ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளர் வசீகரன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் கவர்னருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பின்னர் கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து போலீசார் தடையை மீறி கவர்னர் மாளிகை நோக்கி செல்ல முயன்ற பழநெடுமாறன், பழகருப்பையா உள்பட 100 பேரை கைது செய்தனர்.


Next Story