ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் - எடப்பாடி பழனிசாமி


ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
x

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாள் விழா வரும் 24-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் காவல் தெய்வம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டு, 24.2.2024 முதல் 28.2.2024 வரை 5 நாட்கள், 'இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 76-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்', கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள்; அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது. கழக சட்டமன்ற உறுப்பினர்களும், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளும், தாங்கள் சார்ந்த தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.

மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்டங்களை, கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உள்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளுடனும் இணைந்து சிறப்புப் பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு, இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 76-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி, அதன் விவரங்களை தலைமைக் கழகத்திற்கும், "நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழுக்கும்" அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story