இணைய வழி பண மோசடியில் சிக்காமல் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள்


இணைய வழி பண மோசடியில் சிக்காமல் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள்
x

இணைய வழி பண மோசடி புகார்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் தெரிவித்தார். காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சிபுரம்

வங்கியின் பெயரை சொல்லி. ஓ.டி.பி. எண் வரவழைத்து அந்த எண்ணை கேட்டு சம்பந்தப்பட்டவரின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பது, செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பி அதன் மூலம் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடுவது, போலியான வேலைவாய்ப்பு நிறுவனங்களை உருவாக்கி அதில் வேலை தருவதாக சொல்லி விண்ணப்பிக்கும் போது வங்கி கணக்கு எண்ணை கேட்டு தெரிந்து கொண்டு பின்னர் அதில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்வது, தரமற்ற பொருள்களை இணையம் வாயிலாக விற்பனை செய்வது, போலியான முகநூல் கணக்குகளை உருவாக்கி அவர்கள் பெயரில் அவசரநிலையில் இருப்பதாக கூறி சம்பந்தப்பட்ட நபரின் உறவினர்கள், நண்பர்களிடம் பணம் கேட்டு பெற்று ஏமாற்றுவது போன்ற இணையவழி பண மோசடிகள் சமீப காலமாக அதிகரித்துள்ளது.

எனவே பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இணையவழியில் ஏமாற்றுபவர்கள் பற்றிய விவரங்களை உடனடியாக 1930 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு தெரிவித்தால் அந்த எண் மூலம் எந்த மாவட்டத்தில் எந்த போலீஸ் நிலையத்துக்கு தெரிவிக்க வேண்டுமோ அந்த போலீஸ் நிலையத்துக்கு தகவல் தானாகவே சென்று விடும். பொதுமக்கள் நேரடியாக போலீஸ் நிலையங்களுக்கு வந்துதான் புகார் தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இணையவழி மோசடிகள் குறித்து பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவன உரிமையாளர்களிடம் சைபர்கிரைம் போலீசார் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விரைவில் முககவசம் அணியாதவர்கள் மீது அபராதம் வசூலிக்கப்படும். கஞ்சாவை வாங்கி விற்பனை செய்வதாக தகவல் வந்ததையொட்டி 16 பேரை தீவிரமாக கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கஞ்சா விற்பனை செய்வோரும், விற்பனை செய்வோருக்கு உதவுவோரின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது. அதிக வட்டி வாங்குவதாக 4 புகார்கள் வந்துள்ளன. அவர்களிடமிருந்த ஆவணங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story