வடபழனி முருகன் கோவிலில் மாற்றுத்திறனாளிகளின் திருமணத்தில் மணமக்களுக்கு புத்தாடைகள் - அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்


வடபழனி முருகன் கோவிலில் மாற்றுத்திறனாளிகளின் திருமணத்தில் மணமக்களுக்கு புத்தாடைகள் - அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்
x

வடபழனி முருகன் கோவிலில் மாற்றுத்திறனாளிகளின் திருமணத்தில் மணமக்களுக்கு புத்தாடைகள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

சென்னை

தமிழக சட்டசபையில் 2021-22-ம் ஆண்டுக்கான மானியக்கோரிக்கையில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் கோவிலில் அவர்களுக்கு நடைபெறும் திருமணத்துக்கான கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. கோவிலுக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால் மண்டபத்துக்கான பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி கோவில்கள் மற்றும் மண்டபங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் இல்லாமல் திருமணங்கள் நடைபெற்று வருகின்றது.

அதேபோல் 2022-23-ம் ஆண்டு சட்டசபை மானியக்கோரிக்கையில் கோவில்கள் மற்றும் கோவிலுக்கு சொந்தமான மண்டபங்களில் நடக்கும் மாற்றுத்திறனாளிகள் திருமணங்களில் மணமக்களுக்கு கோவில் சார்பாக புத்தாடைகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் சென்னை வடபழனி முருகன் கோவிலில் மாற்றுத்திறனாளிகளான மணமகன் சிவா மற்றும் மணமகள் சுகந்தி ஆகியோர்களுக்கு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கான புத்தாடைகளை அமைச்சர் சேகர்பாபு வழங்கி, இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த ஆண்டு முதல் கோவில்கள் மற்றும் கோவில்களுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் கட்டணம் இல்லாமல் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம் நடைபெற்று வருகிறது. சட்டசபையில் கடந்த மானிய கோரிக்கை அறிவிப்பின்படி தற்போது வடபழனி முருகன் கோவிலில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் திருமணத்தில் மணமக்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.

வரும் காலங்களில் இத்திட்டம் கோவில்களில் சிறப்பாக செயல்படுத்தப்படும். இதை செயல்படுத்த தேவையான நிதியை கோவில் வரவு-செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தியாகராய நகர் எம்.எல்.ஏ. ஜெ.கருணாநிதி, இணை கமிஷனர் ந.தனபால், வடபழனி துணை கமிஷனர் முல்லை உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story