மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x

தஞ்சையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் தீபக்ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர்

விழிப்புணர்வு ஊர்வலம்

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. தஞ்சை ரெயில் நிலையம் அருகே இருந்து ஊர்வலத்தை கலெக்டர் தீபக்ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தில் நீர்பாதுகாப்பு" என்ற நோக்கத்தின் அடிப்படையாக கொண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசார வாகனத்தினையும் அவர் தொடங்கி வைத்தார்.

பின்னர் கலெக்டர் தீபக்ஜேக்கப் கூறுகையில், நீர் பாதுகாப்பு என்ற 61601 நோக்கத்தினை அடிப்படையாக கொண்டு, அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு அவசியம் என கருதி தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. நீரின் பயன்பாட்டிற்கும் நீரின் செறிவூட்டலுக்கும் இடையே உள்ள இடைவெளியை மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அவசியம் நிறுவ வேண்டும். வடகிழக்கு பருவமழை கால மழை நீரை முழுவதுமாக சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திட மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை நிறுவி முறையாக பராமரிக்க வேண்டும்.

பழுதுகளை சரி செய்ய வேண்டும்

ஏற்கனவே உள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை புனரமைத்து மழைநீரை சேகரித்து நிலத்தடி நீர்வளத்தினை மேம்படுத்திட வேண்டும். மேலும், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு வீட்டு கூரையை மழைக்காலத்திற்கு முன் சுத்தப்படுத்த வேண்டும். காய்ந்த இலை சருகுகளை அப்புறப்படுத்த வேண்டும். மழைநீர் கொண்டுவரும் குழாய்களில் ஏற்படக் கூடிய அடைப்புகளை நீக்கி பழுதுகளை சரிசெய்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஊர்வலம் தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்து அண்ணா சிலை வரை நடைபெற்றது. இதில் தூய அந்தோணியார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் தூய இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளை சார்ந்த மாணவ-மாணவிகள் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் நிர்வாக பொறியாளர் ஜெயக்குமார், மாவட்ட கல்வி அலுவலர் மதன்குமார், உதவி நிர்வாக பொறியாளர் ஜீவசங்கர். துணை மேற்பார்வை பொறியாளர் ராஜ்குமார், உதவி நிர்வாக பொறியாளர் ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story