ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை அதிகாரி திடீர் மாற்றம்


ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை அதிகாரி திடீர் மாற்றம்
x

ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை அதிகாரி திடீர் மாற்றம் செய்யப்பட்டார்.

திருச்சி

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி அதிகாலை வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றபோது, மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். அவர் உடல் திருச்சி-கல்லணை சாலையில் காவிரி ஆற்றுப்படுகையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தது. இந்த வழக்கு குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசாரும்,சி.பி.ஐ.யும் விசாரணை நடத்தியது. ஆனால் 10 ஆண்டுகள் கடந்த பிறகும் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படாததால் கோர்ட்டு உத்தரவுப்படி இந்த வழக்கில் துப்பு துலங்க சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை சூப்பிரண்டு மதன், சி.பி.ஐ. அதிகாரி ரவி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக்குழு கடந்த சில மாதங்களாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். டெல்டா மாவட்ட ரவுடிகள் உள்பட பலரும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். சந்தேகத்துக்குரிய 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தப்பட்டது. ஆனாலும் வழக்கு கிணற்றில் போட்ட கல்லாக எந்த முன்னேற்றமும் இன்றி உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வரும் போலீஸ் சூப்பிரண்டுகள் 16 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்து வரும் சூப்பிரண்டு ஜெயக்குமாரும் இடம் பெற்றுள்ளார். இவர் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆகையால் இவருக்கு பதிலாக ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக்குழு போலீஸ் சூப்பிரண்டாக யார் நியமிக்கப்படுவார்?. ராமஜெயம் கொலை வழக்கு எப்போது முடிவுக்கு வரும்? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் உருவாகி உள்ளது.


Next Story