பெருஞ்சாணி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு


பெருஞ்சாணி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு
x
தினத்தந்தி 22 Jun 2023 6:45 PM GMT (Updated: 22 Jun 2023 6:45 PM GMT)

கன்னிப்பூ சாகுபடிக்காக பெருஞ்சாணி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடி நடைபெற்று வருகிறது. இதற்காக பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளில் இருந்து கடந்த 1-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறக்கப்பட்டு 2 வாரங்கள் ஆகியும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாததால் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். எனவே கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று வலியுறுத்தி கருகிய பயிர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து தற்போது கால்வாய்களை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

பெருஞ்சாணி அணையில் இருந்து பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் அணை நீர்மட்டம் வேகமாக குறைய தொடங்கியது. இதனால் பெருஞ்சாணி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அதாவது வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று 50 கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டது. அதே சமயம் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 716 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரானது தோவாளை கால்வாய், புத்தனார் கால்வாய், அனந்தனார் கால்வாய்களில் விடப்பட்டுள்ளது.


Next Story