பாசன பகுதிகளுக்காக வைகை அணையில் இருந்து 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு


பாசன பகுதிகளுக்காக  வைகை அணையில் இருந்து 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 23 Nov 2023 6:59 AM GMT (Updated: 23 Nov 2023 7:22 AM GMT)

ஆண்டிப்பட்டி அருகே 71 உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் தற்போது 67 அடியாக உள்ளது.

ஆண்டிப்பட்டி,

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசன பகுதிகளுக்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி வீதம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வைகை ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே 71 உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் தற்போது 67 அடியாக உள்ளது. வைகை அணையில் இருந்து ஏற்கனவே மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசனப் பகுதி விவசாயிகள் தங்கள் பகுதிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று சிவகங்கை, ராமநாதபுரம் வைகை பூர்வீக பாசன 1,2,மற்றும் 3பகுதிகளுக்கு வைகை அணையில் இருந்து இன்று முதல் டிசம்பர் 8ந்தேதி வரையில் 3 கட்டங்களாக தண்ணீர் திறக்க தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

முதல்கட்டமாக சிவகங்கை, ராமநாதபுரம் வைகை பூர்வீக பகுதி 3க்கு இன்று முதல் வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி வீதம் அணையின் பிரதான 7 மதகுகளில் தண்ணீர் ஆற்றுப்படுகை வழியாக திறக்கப்பட்டது.

ஏற்கனவே வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 2ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கூடுதலாக 4 ஆயிரம் கனஅடியும் சேர்த்து மொத்தமாக 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், வைகை அணையின் முன்பாக இரண்டு கரைகளையும் இணைக்கு தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கி உள்ளது. வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் வைகை ஆற்றில் பொதுமக்கள் யாரும் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வைகை பூர்வீக பாசனப்பகுதி 3க்கு இன்று முதல் 29ந்தேதி வரையிலும், பூர்வீக பாசன பகுதி 2க்கு டிசம்பர் 1ந்தேதி முதல் 5ந்தேதி வரையிலும், பூர்வீக பாசன பகுதி 1க்கு டிசம்பர் 6ந்தேதி முதல் 8ந்தேதி வரையிலும் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. 3 கட்டமாக சேர்த்து வைகை அணையில் இருந்து மொத்தமாக 2466 மில்லியன் கனஅடி தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story