பொள்ளாச்சியில் பரபரப்பு:பெயிண்டரை பிளேடால் கழுத்தை அறுத்த டிரைவர் கைது


பொள்ளாச்சியில் பரபரப்பு:பெயிண்டரை பிளேடால் கழுத்தை அறுத்த டிரைவர் கைது
x
தினத்தந்தி 1 May 2023 6:45 PM GMT (Updated: 2 May 2023 4:41 AM GMT)

பொள்ளாச்சியில் பெயிண்டரை பிளேடால் கழுத்தை அறுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி நந்தனார் காலனியை சேர்ந்தவர் தம்பான் என்கிற குட்டி தம்பான் (வயது 38). பெயிண்டர். இவர் தற்போது ஊஞ்சவேலாம்பட்டி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரும் நந்தனார் காலனியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான செந்தில்குமார் (43) என்பவரும் திப்பம்பட்டியில் வைத்து நேற்று மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் மோட்டார் சைக்கிளில் நந்தனார் காலனியை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளை தம்பான் ஓட்ட, பின்னால் செந்தில்குமார் அமர்ந்திருந்தார். நந்தனார் காலனிக்குள் மோட்டார் சைக்கிள் வந்ததும், மறைத்து வைத்திருந்த பிளேடால் தம்பான் கழுத்தை அவர் அறுத்ததாக தெரிகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் தம்பான் கீழே விழுந்தார். இதையடுத்து அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து செந்தில்குமாரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கடந்த 2013-ம் ஆண்டு சம்பளம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் செந்தில்குமாரின் தம்பி நாகராஜை, தம்பான் கொலை செய்ய முயற்சி செய்ததும், அதை தொடர்ந்து 2016-ம் ஆண்டு மீண்டும் தகராறு ஏற்பட்ட போது நாகராஜை, தம்பான் கொலை செய்ததும் தெரியவந்தது.

கோவை கோர்ட்டில் நடந்து வந்த வழக்கு கடந்த 2017-ம் ஆண்டு தள்ளுப்படி ஆனது. இந்த நிலையில் தம்பி நாகராஜின் கொலைக்கு பழிவாங்குவதற்கு தம்பானின் கழுத்தை செந்தில்குமார் அறுத்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு அவரை கைது செய்தனர். பட்டப்பகலில் நடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Next Story