காஞ்சீபுரம் அருகே போலீசாருக்கு பயந்து மேம்பாலத்திலிருந்து குதித்த 2 ரவுடிகளுக்கு கால் முறிந்தது


காஞ்சீபுரம் அருகே போலீசாருக்கு பயந்து மேம்பாலத்திலிருந்து குதித்த 2 ரவுடிகளுக்கு கால் முறிந்தது
x

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட 2 ரவுடிகள் போலீசாருக்கு பயந்து மேம்பாலத்தில் இருந்து குதித்தனா். இதில் அவர்களுக்கு கால் முறிந்தது.

காஞ்சிபுரம்

பல்வேறு குற்ற வழக்கில் தேடப்பட்டவர்கள்

காஞ்சீபுரம், பல்லவன் மேடு பகுதியை சேர்ந்த சுகுமார் மகன் பிரபாகரன் என்ற சரவணன் (வயது 30). இவர் மீது 3 கொலை வழக்குகள், 8 கொலை முயற்சி வழக்குகள் உள்பட மொத்தம் 30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இவரது தம்பி கார்த்திக் என்ற நெல்சன் மண்டேலா (22). இவர் மீதும் பல்வேறு கொலை, கொள்ளை முயற்சி உள்பட பல குற்ற வழக்குகள் இருந்து வருகிறது. இவர்கள் இருவரும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளாக இருந்து வந்த நிலையில் தனிப்படை அமைத்து போலீஸ் துறையினர் இவர்களைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த தியாகு அரிசி வியாபாரம் செய்து வருகிறார். அவரை சில மாதங்களுக்கு முன்பு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட சிலர் பிரபாகரின் தம்பி எனவும், பிரபல ரவுடியின் கூட்டாளிகள் என மிரட்டி தியாகுவிடம் பணம் கேட்டுள்ளனர். உடனே தியாகு சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலை மிரட்டல் வந்த செல்போன் எண்ணை டிராக் செய்து போது கோயம்புத்தூரிலிருந்து அழைப்பு வந்திருப்பது தெரிந்தது. அங்கு சென்ற போலீசார் இது தொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் பிரபாகர் மற்றும் அவனது தம்பி கார்த்தி (எ) நெல்சன் மண்டேலா ஆகிய இருவரும் பேச வைத்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரபாகர் மற்றும் அவனது தம்பி நெல்சன் மண்டேலா ஆகியோரை தேடி வந்த நிலையில் இருவரும் காஞ்சீபுரம் புதிய ரெயில் நிலையம் அருகில் உள்ள மேம்பாலத்தில் நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர்.

கால் முறிந்தது

அப்போது இருவரும் கத்தியைக் காட்டி போலீசாரை தாக்க முற்பட்டதால் தற்காப்புக்காக போலீசார் இவர்களை துப்பாக்கியால் சுட்டு விடுவதாக கூறியதும், திடீரென இருவரும் மேம்பாலத்திலிருந்து கீழே குதித்து தப்ப முயன்றனர். இந்த சம்பவத்தில் சகோதரர்கள் இருவருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தனிப்படை போலீசார் அவர்கள் இருவரையும் காஞ்சீபுரம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் சேர்த்ததையடுத்து இருவரும் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக சிவகாஞ்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story