மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது நாட்டு வெடிகுண்டு தவறி விழுந்து வெடித்ததில் ரவுடி படுகாயம்


மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது நாட்டு வெடிகுண்டு தவறி விழுந்து வெடித்ததில் ரவுடி படுகாயம்
x

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது நாட்டி வெடிகுண்டி தவறி விழுந்து வெடித்ததில் ரவுடி படுகாயம் அடைந்தார்.

சென்னை

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த பரணிபுத்தூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் 3 பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதில் ஒரு நபர் பையில் எடுத்து சென்ற பொருள் கீழே விழுந்து வெடித்து சிதறியது.

இதனால் அங்கு இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதில் அருகில் இருந்த டீ கடையின் கண்ணாடியும் நொறுங்கியது. மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் அங்கு இருந்து தப்பிச்சென்றனர். இது குறித்து தகவலறிந்த மாங்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தினர்.

மேலும், மோட்டார் சைக்கிளில் சென்ற நபர்கள் யார் என விசாரித்தபோது, அவர்களில் ஒருவர் சிறிது தூரத்தில் காலில் பலத்த காயத்துடன் படுத்து கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை குறித்து விசாரித்தபோது அவர் அய்யப்பன்தாங்கலை சேர்ந்த வினோத்குமார் (வயது 27) என்பதும், ரவுடியான இவர் மீது மாங்காடு, போரூர் போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

மேலும் தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது கையில் வைத்திருந்த பை கிழிந்து அதில் இருந்த நாட்டு வெடிகுண்டு கீழே விழுந்து வெடித்ததில் காயம் ஏற்பட்டது தெரியவந்தது.

இவர்கள் எதற்காக நாட்டு வெடிகுண்டை எடுத்து சென்றார்கள்? என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். படுகாயம் அடைந்த நபர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Next Story