உலகின் உயரமான 'எவரெஸ்ட்' சிகரத்தில் ஏறும் சென்னை பெண்ணுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி


உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் சென்னை பெண்ணுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி
x

உலகின் உயரமான ‘எவரெஸ்ட்' சிகரத்தில் ஏறப்போகும் சென்னையை சேர்ந்த பெண்ணுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை

முத்தமிழ் செல்வி

உலகின் உயரமான 'எவரெஸ்ட்' சிகரத்தில் 8 ஆயிரத்து 848 மீட்டர் ஏறி சென்னையை சேர்ந்த என்.முத்தமிழ் செல்வி என்ற பெண் சாதனை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர், 'ஏசியன் டிரக்கிங் இன்டர்நேஷனல்' நிறுவனம் மூலம் நேபாளம் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து புறப்படும் குழுவினருடன் இணைந்து பயணிக்க உள்ளார்.

இதற்காக அவர், தமிழக அரசிடம் நிதி உதவி கேட்டு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

அப்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாதரெட்டி, பொதுமேலாளர் (நிர்வாகம்) மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.

மலைகளில் கண்ணை கட்டிக்கொண்டு...

நேபாள அரசின் ஒத்துழைப்புடன் நடைபெற உள்ள இந்த 'எவரெஸ்ட்' சிகரம் ஏறுதலில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து பலர் பங்கேற்க உள்ளனர். இதில் சென்னையை சேர்ந்த முத்தமிழ் செல்வியும் ஒருவர் ஆவார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு மகளிர் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காஞ்சீபுரம் மாவட்டம் மலைப்பட்டு மலையில் 155 அடி உயரத்தில் இருந்து கண்ணை கட்டிக் கொண்டு 58 நிமிடங்களில் இறங்கினார்.

பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இமாசலபிரதேசம், குலுமணாலி மலையில் தனது 2 குழந்தைகளில் ஒரு குழந்தையை முதுகில் கட்டிக் கொண்டும், மற்றொரு குழந்தையுடன் 165 அடி உயரத்தில் இருந்து கண்ணை கட்டிக்கொண்டு 55 நிமிடங்களில் கீழே நடந்து வந்தார்.

மேலும் இவர், இமாசலபிரதேசம், லடாக், காங் யெட்சே பீக்-2 மலையில் 5 ஆயிரத்து 500 மீட்டர் வரை ஏறி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story