சென்னை விமான நிலையத்தில் ரூ.11¾ கோடி போதை பவுடர் பறிமுதல் - வெளிநாட்டு பெண் கைது


சென்னை விமான நிலையத்தில் ரூ.11¾ கோடி போதை பவுடர் பறிமுதல் - வெளிநாட்டு பெண் கைது
x

சென்னை விமான நிலையத்தில் எத்தியோப்பியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.11¾ கோடி போதை பவுடரை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக வெனிசூலா நாட்டை சேர்ந்த பெண்ணை கைது செய்தனர்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானத்தில் பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் உதய் பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த தென் அமெரிக்காவில் உள்ள வெனிசூலா நாட்டை சேர்ந்த பிரான்சிஸ் ஜோசல் டோரஸ் (வயது 26) என்ற பெண்ணை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

அவர் சுற்றுலா விசாவில் சென்னை வந்ததாக கூறினார். அவரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதையடுத்து அவரது உடைமைகளை சோதனை செய்தபோது அதில் விலை உயர்ந்த போதை பவுடரை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

அவரிடம் இருந்து ரூ.11 கோடியே 75 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 218 கிராம் எடை கொண்ட 'கொஹைன்' போதை பவுடரை பறிமுதல் செய்தனர். அதனை கடத்தி வந்த வெனிசூலா நாட்டு பெண்ணை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அதனை யாருக்காக கடத்தி வந்தார்?. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுக்கு இதில் தொடர்பு உள்ளதா? சென்னையில் உள்ள போதை பொருள் கடத்தல் கும்பல் யார்? என சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


Next Story