காஞ்சீபுரத்தில் கூடுதல் லாபம் தருவதாக ரூ.22 கோடி பணமோசடி; 2 போலீசார் குடும்பத்தினருடன் கைது


காஞ்சீபுரத்தில் கூடுதல் லாபம் தருவதாக ரூ.22 கோடி பணமோசடி; 2 போலீசார் குடும்பத்தினருடன் கைது
x

காஞ்சீபுரத்தில் போலீசார் மற்றும் பொதுமக்களிடம் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்ற ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்ட 2 போலீசார் குடும்பத்தினருடன் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம்

அதிக லாபம் பெறுகிறார்

காஞ்சீபுரம் விளக்கடி கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மகன் சங்கரன் (29). இவருக்கும் ஏனாத்தூர் புதுநகரை சேர்ந்த போலீஸ்காரர் ஆரோக்கிய அருண் என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. பழக்கத்தின் அடிப்படையில் ஆரோக்கிய அருண் தனது சகோதரர்கள் சகாய பாரத், இருதயராஜ், கசாய பாரத்தின் மனைவி சவுமியா, இருதயராஜ் மனைவி ஜெயஸ்ரீ, தன்னுடைய மனைவி மகாலட்சுமி மற்றும் பெற்றோர் என ஒவ்வொருவருவரும் வெவ்வேறு தொழில் செய்து வருகிறோம். இவர்களில் தன்னுடைய மனைவி மகாலட்சுமி தொழில் செய்து அதிக லாபம் பெறுகிறார் என்று தெரிவித்துள்ளார். இதில் முதலீடு செய்தால் 5 சதவீதம் தொகையை ஒரு மாதத்தில் திருப்பி தருவதாக மூளைச்சலவை செய்துள்ளார். இதையடுத்து சங்கரன் 10 தவணைகளில் ரூ.3 கோடியே 10 லட்சம் ஆரோக்கிய அருணிடம் கொடுத்துள்ளார். ஆனால் பேசியபடி பணத்தை திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

இதேபோன்று காஞ்சீபுரத்தை சேர்ந்த சுகுமார் என்பவரிடம் ஆன்லைன் சூதாட்டத்தில் முதலீடு செய்து வருமானத்தை பெருக்கி தருவதாக கூறி ரூ.3 கோடியும், ஸ்ரீபெரும்புதூர் போக்குவரத்து காவல் பிரிவில் பணிபுரியும் யுவராஜ் என்பவரிடம் இருந்து ரூ.5 கோடியே 5 லட்சம், போலீஸ்காரர் மனோகர் என்பவரிடம் இருந்து ரூ.11 கோடியே 5 லட்சம், காஞ்சீபுரத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவரிடம் இருந்து ரூ.2 கோடியே 5 லட்சம் என சுமார் ரூ.22 கோடிக்கு மேல் பலரிடம் ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு வகையான தொழில் செய்வதாக கூறி பணத்தை பெற்று கொண்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து சங்கரன் அளித்த புகாரின் பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர். விசாணையில் இதேபோன்று பலரிடம் பணமோசடியில் ஆரோக்கிய அருண் ஈடுபட்டதும், அதற்கு உறுதுணையாக அவரது குடும்பத்தினர் இருந்ததும் தெரியவந்தது.

கைது

இதனைத் தொடர்ந்து, பணமோசடியில் ஈடுபட்ட இருதயராஜ், அவரது மனைவி ஜெயஸ்ரீ, சகாய பாரத், அவரது மனைவி சவுமியா, தாய் மரியா செல்வி, ஆரோக்கிய அருண், அவரது மனைவி மகாலட்சுமி, தந்தை ஜோசப் ஆகியோரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதில் சகோதரர்களான ஆரோக்கிய அருண், காஞ்சீபுரம் போக்குவரத்து காவல் துறையிலும், சகாய பாரத் மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும், இருதயராஜ் போலீஸ் பணியில் இருந்து விலகி பள்ளி கல்வித்துறையிலும் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.


Next Story