சென்னை விமான நிலையத்தில் ரூ.50 கோடி போதை பவுடர் பறிமுதல் - 75 வயது முதியவர் கைது


சென்னை விமான நிலையத்தில் ரூ.50 கோடி போதை பவுடர் பறிமுதல் - 75 வயது முதியவர் கைது
x

சென்னை விமான நிலையத்தில் எத்தியோப்பியாவில் இருந்து கடத்திய ரூ.50 கோடி போதை பவுடரை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 75 வயது முதியவரை கைது செய்தனர்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அப்போது எத்தியோப்பியா நாட்டு தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது குஜராத்தை சேர்ந்த 75 வயது முதியவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

அவரிடம் இருந்த சூட்கேசில் விலைஉயர்ந்த போதை பவுடர் மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து சுமார் ரூ.50 கோடி மதிப்புள்ள 8 கிலோ 96 கிராம் ஹெராயின் போதை பவுடரை பறிமுதல் செய்தனர். அதனை கடத்தி வந்த குஜராத் முதியவரை கைது செய்த அதிகாரிகள், விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

முதியவரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், எத்தியோப்பியாவில் இருந்து அந்த போதை பவுடரை சென்னையில் யாருக்காக அவர் கடத்தி வந்தார்?. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? சர்வதேச கடத்தல் கும்பலுக்கு இதில் தொடர்பு உள்ளதா? சென்னையில் உள்ள கடத்தல் போதை கும்பல் யார்? என விசாரித்து வருகின்றனர்.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு மும்பையில் ரூ.53 கோடி ஹெராயின் பிடிப்பட்ட வழக்கின் தொடர்ச்சியாக சென்னையிலும் சிக்கியதாக தெரியவந்தது.


Next Story