வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த லிங்க்.. கிளிக் செய்த வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி


வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த லிங்க்..  கிளிக் செய்த வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி
x

ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிகம் லாபம் கிடைக்கும் என்று ரூ.8¾ லட்சம் மோசடி செய்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

இந்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கோவை ஒண்டிப்பதூர் பகுதியை சேர்ந்தவர் பிரசாத் (வயது 21). தனியார் நிறுவன ஊழியர். இவருடைய செல்போன் வாட்ஸ்-அப் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குறுந்தகவலுடன் ஒரு லிங்க் வந்தது. அதில் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிகமாக கமிஷன் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதைப்பார்த்த பிரசாத் அந்த லிங்கை கிளிக் செய்தார்.

அப்போது அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் எதிர்முனையில் பேசிய நபர் ஆன்லைன் வர்த்தகத்தில் நீங்கள் முதலீடு செய்தால் அதிகலாபம் பெறலாம் என்று ஆசையை தூண்டும் வகையில் பேசினார். இதை நம்பிய பிரசாத் அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் வெவ்வேறு கட்டங்களாக ரூ.8 லட்சத்து 84 ஆயிரத்தை செலுத்தினார். ஆனால் அதன்பிறகு அந்த நபர் கூறிய கமிஷன் தொகையை தரவில்லை என்று தெரிகிறது.

முதலீட்டு தொகையையும் குறிப்பிட்டவாறு வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து அந்த எண்ணை தொடர்புகொண்டபோது அது சுவிட் ஆப் என்று வந்தது. இதனால் தன்னிடம் ரூ.8 லட்சத்து 84 ஆயிரத்தை மோசடி செய்ததை அறிந்த அவர் இதுகுறித்து கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரிடம் நூதன முறையில் மோசடி செய்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிகம் லாபம் கிடைக்கும் என்று நூதன முறையில் மோசடி செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story