ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி; தம்பதி மீது வழக்கு


ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி; தம்பதி மீது வழக்கு
x
தினத்தந்தி 25 Oct 2023 9:15 PM GMT (Updated: 25 Oct 2023 9:15 PM GMT)

போடியில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேனி

போடியில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரியல் எஸ்டேட் அதிபர்

போடி ஜக்கமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 39). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரிடம் போடி சாரல்நகரை சேர்ந்த தர்மலிங்கம், அவரது மனைவி யசோதா ஆகியோர் அறிமுகம் ஆகியுள்ளனர். அப்போது அவர்கள், தாங்கள் நிலக்கரி வியாபாரம் செய்வதாகவும், அதன் தொழில் அபிவிருத்திக்காக ரூ.20 லட்சம் தேவைப்படுகிறது என்றும் கூறினர்.

மேலும் அந்த பணத்தை கடனாக கொடுத்தால் மாத வட்டியாக ரூ.2 லட்சம் தருவதாக கணேசனிடம் ஆசைவார்த்தைகள் கூறினர். இதனை நம்பிய கணேசன் மற்றும் அவரது தந்தை சுந்தர்ராஜ் ஆகியோர் கடந்த ஆண்டு ரூ.20 லட்சத்தை தர்மலிங்கம் மற்றும் யசோதாவிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

மோசடி

பின்னர் கடன் வாங்கிய தம்பதி, ஒருசில மாதங்களுக்கு மட்டும் வட்டி கொடுத்துள்ளனர். அதன்பிறகு பணம் தராமல் இழுத்தடித்து வந்தனர். இதுகுறித்து கணேசன் கேட்டபோது, அவர்கள் சரியான பதில் கூறவில்லை. நேரடியாக சென்று கேட்டபோது, பணம் தர முடியாது என்று கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மோசடி செய்யப்பட்டதை அறிந்த கணேசன், இதுகுறித்து போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் தர்மலிங்கம், யசோதா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story