'பாரம்பரிய நெல் விதை வங்கி' பராமரிப்பு திட்டத்தில் ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை


பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிப்பு திட்டத்தில் ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை
x
தினத்தந்தி 28 Jun 2023 5:03 PM GMT (Updated: 29 Jun 2023 9:00 AM GMT)

'பாரம்பரிய நெல் விதை வங்கி' பராமரிப்பு திட்டத்தில் ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது பயன்பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

தமிழக அரசு வேளாண்மை துறையின் மூலம் 'பாரம்பரிய நெல் விதை வங்கி' பராமரிப்பு விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை அளிக்கும் திட்டத்தினை 2023- 24-ம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி பாரம்பரிய நெல் விதை வங்கி திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் 'அக்ரிஸ்நெட்' வலைதளம் அல்லது உழவன் செயலியில் விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கு விண்ணப்பிக்கும் விவசாயிகள் குறைந்தபட்சம் 100 பாரம்பரிய நெல் ரகங்களை நெல் வங்கியில் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பராமரித்து வரும் நெல் ரகங்களை மறு உற்பத்தி செய்து இனத் தூய்மையுடன் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.

ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் மரபுசார் நெல் ரகங்களை உற்பத்தி செய்து பராமரிக்க வேண்டும். விதை வங்கியில் பராமரிக்கப்படும் பாரம்பரிய நெல் ரகங்கள் நல்ல முளைப்புத் திறனுடன் இருப்பதனை தொடர்ந்து உறுதி செய்திட வேண்டும். வயல்களில் உரிய அளவு சாகுபடி செய்திடல் வேண்டும்.

கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பார்வையிடும் வகையில் முறையாக காட்சிப்படுத்த வேண்டும். 'பாரம்பரிய நெல் விதை வங்கி' பராமரிக்கும் விவசாயிகள் ஊக்கத்தொகை பெறுவதற்கு 'அக்ரிஸ்நெட்' வலைதளம் அல்லது உழவன் செயலியில் விண்ணப்பிக்க தேவையான விண்ணப்ப படிவங்களை தங்கள் வட்டாரத்தில் உள்ள வேளாண்மை உதவி அலுவலர்களை அணுகி பெற்றுக் கொள்ளலாம்.

இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார் தெரிவித்துள்ளார்.


Next Story