பங்காரு அடிகளார் மறைவு ஆன்மிக அன்பர்களுக்கு பேரிழப்பு.. ஆர்.எஸ்.எஸ். இரங்கல்


பங்காரு அடிகளார் மறைவு ஆன்மிக அன்பர்களுக்கு பேரிழப்பு.. ஆர்.எஸ்.எஸ். இரங்கல்
x

பங்காரு அடிகளார்- ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

எண்ணிலடங்கா சேவையாற்றிய பங்காரு அடிகளாரின் மறைவு, ஆன்மிக அன்பர்களுக்கும், அன்னை ஆதிபராசக்தியின் பக்தர்களுக்கும் பேரிழப்பாகும் என ஆர்.எஸ்.எஸ். தெரிவித்துள்ளது.

பங்காரு அடிகளார் மறைவுக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

ஆன்மிக குரு பங்காரு அடிகளார் முக்தி அடைந்தது, அவரது பக்தர்கள் மற்றும் ஆன்மிக சகோதரர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சிறுவயது முதலே ஆன்மிகப் பாதையில் பயணித்து, லட்சக்கணக்கான சாமானியர்களை ஆன்மிக பயணத்தில் வழிநடத்தக்கூடிய ஸ்ரீ ஆதிபராசக்தி பீடத்தை நிறுவினார். சனாதன தர்மத்தை சாதாரண மக்களிடம், குறிப்பாக பெண்கள் மத்தியில் கொண்டு செல்வதில் இவரது பங்களிப்பு முக்கியமானது.

ஆன்மிகம், கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளில் அவரது பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும்.

அவர் முக்தி அடைந்த இந்த நேரத்தில் அவரது பக்தர்கள் அனைவருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். தென்பாரதத் தலைவர் முனைவர் இரா.வன்னியராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

தவத்திரு பங்காரு அடிகளார் முக்தி அடைந்த செய்தி ஆன்மிக அன்பர்கள் மத்தியில் மிகுந்த மன வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைப் பருவம் முதலாகவே ஆன்மிக நீரோடையில் நீந்திய அடிகளார், தனது கடும் முயற்சிக்குப் பிறகு அன்னை ஆதிபராசக்திக்கு பீடம் ஏற்படுத்தி, அப்போது முதல் முழுநேரமாக ஆன்மிக சேவையை, உலகெங்கிலும் அன்னை ஆதிபராசக்தியின் மகிமைகளைக் கொண்டு சேர்த்து வந்தார். உலகெங்கிலும் இருக்கின்ற அன்னை ஆதிபராசக்தியின் பக்தர்களுக்கு, ஆன்மிக குருவாகவும், அன்பைப் பொழியும் அன்னையாகவும் திகழ்ந்தார்.

கோடிக்கணக்கான மக்களின் ஆன்மிகத் தேடலுக்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்தார். பாமரரின் இதயத்தில் அன்னையின் வடிவான சனாதன தர்மத்தைக் கொண்டு சேர்த்ததோடு, அவர்களின்பால் அன்பும் அக்கறையும் கொண்டு அவர்களின் வாழ்வில் ஒளியேற்றிட அரும்பாடுபட்டார்.

ஏழை, எளிய மக்களுக்காக கல்வி நிலையம் துவங்கி கல்வி கண் திறந்தார். மருத்துவம் பார்க்க இயலாதவர்களுக்கு மருத்துவமனை துவங்கி பெருஞ்சேவை புரிந்தார்.

ஆன்மிகப் புரட்சியாக, பெண்கள் கருவறைக்குள் செல்ல இயலாது என்ற கூற்றை பொய்யாக்கியதோடு, பெண்களையே அம்மனுக்கு பூஜை செய்ய வைத்து சாதனை நிகழ்த்தினார்.

இப்படி எண்ணிலடங்கா சேவையாற்றிய பங்காரு அடிகளாரின் மறைவு, ஆன்மிக அன்பர்களுக்கும், அன்னை ஆதிபராசக்தியின் பக்தர்களுக்கும் பேரிழப்பாகும்.

அன்னாரின் சேவையை கவுரவித்து மத்திய அரசாங்கம் 'பத்மஶ்ரீ' விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.

அடிகளார் செய்த ஆன்மிக, மருத்துவ, கல்விச் சேவை என்றும் அவர் புகழ்பாடும். அடிகளாரை இழந்த அன்னையின் பக்தர்களுக்கும் அவரைப் பின்பற்றுவோருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஓம் சாந்தி.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story