காசி தமிழ் சங்கமம் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். கருத்தியலை பரப்புவதா? - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்


காசி தமிழ் சங்கமம் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். கருத்தியலை பரப்புவதா? - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
x

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மாணவர் மத்தியில், ஊடுருவும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை,

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தமிழகத்தில் மிக முக்கிய கல்வி நிலையங்களில் உள்ள மாணவர் மத்தியில், ஊடுருவும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

இந்திய மொழிகள் குழு மற்றும் ஒன்றிய அரசாங்க கல்வி அமைச்சகத்தின் சார்பில் நவம்பர் 16 முதல் டிசம்பர் 19-ந்தேதி வரையில், காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது. அறிவுசார் மற்றும் கலாசாரத்தின் இரண்டு வரலாற்று சிறப்புமிக்க தமிழ்நாடு-காசி ஆகிய இரு மையங்களின் வாயிலாக இந்திய நாகரிகத்திலுள்ள ஒற்றுமையை அறிந்துகொள்ள இந்த சங்கமம் ஒரு ஏதுவான தளமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

"தமிழர்களின் பாரம்பரியத்தை உலகறிய செய்வதற்கு காசி தமிழ் சங்கமம்" என்று நிகழ்ச்சி அமைப்பாளர் சாமுகிருஷ்ண சாஸ்திரி கூறியுள்ளார். மாணவர்கள், கைவினை, இலக்கியம், ஆன்மிகம், வர்த்தகம், ஆசிரியர்கள், பாரம்பரியம், தொழில்முனைவோர், தொழில்கள், கோவில்கள், கிராமப்புறம், கலாசாரம் என்று 12 பிரிவுகளிலிருந்து, ஒவ்வொரு பிரிவில் இருந்தும் ஒவ்வொரு நாள் என்று, ரெயில்களில் மொத்தம் 2,500 பேர் ராமேசுவரம், கோவை, சென்னை ஆகிய இடங்களிலிருந்து அழைத்து செல்லப்படுகிறார்கள். முதல் ரயில் ராமேசுவரத்திலிருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு நவம்பர் 16 அன்று புறப்பட்டுள்ளது.

இவர்கள் தளங்களை சுற்றிப்பார்த்துவிட்டு பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடக்கும் கருத்தரங்குகளில் கலந்துவிட்டு, அங்குள்ள கண்காட்சியையும் பார்வையிடுவார்கள் என்று கூறப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தமிழகத்தில் மிக முக்கிய கல்வி நிலையங்களில் உள்ள மாணவர் மத்தியில், ஊடுருவும் வகையில் இந்த நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை ஐ.ஐ.டியில், கடந்த சில நாள்களுக்கு முன், ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மாநில உயர்கல்விதுறை அல்லது தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டு துறை விவாதிக்கப்படவில்லை. மாநில அரசின் எந்த ஒரு பங்களிப்பும் இருப்பதாக தெரியவில்லை. மாநில அரசும் இத்தகைய நிகழ்ச்சி மீது எந்த ஒரு கருத்தும் வெளியிடாதது ஆச்சர்யமாக உள்ளது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு ஆள்பிடிக்கும் நோக்குடன் நடைபெறும் இந்த காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சி உண்மையில் கலாச்சாரம், இதர நல்லெண்ண நிகழ்வுகளுக்காக அல்ல என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. இந்த வகுப்புவாத நோக்கிலான நிகழ்வுகளை தடுத்து நிறுத்த கல்விதுறையும், தமிழ் வளர்ச்சி பண்பாட்டு துறையும், தமிழ்நாடு அரசும் உரிய தலையீடு செய்ய வேண்டும். இதர ஜனநாயக சக்திகளும் இந்த நிகழ்ச்சி பாதிப்பை உணர்ந்து, தடுத்து நிறுத்தும் வகையில் செயலாற்ற சிபிஐ(எம்) மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story