அண்ணாமலை மீதான வழக்கு: தடை விதித்த சுப்ரீம் கோர்ட்டு


அண்ணாமலை மீதான வழக்கு: தடை விதித்த சுப்ரீம் கோர்ட்டு
x

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.

சென்னை,

கடந்த அக். மாதம் "பேசு தமிழா பேசு" என்ற யூடியூப் சேனலுக்கு தமிழ்நாடு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர் இந்து மத கலாச்சாரத்தை அழிக்கும் நோக்கத்தில் தான் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என்று கிறிஸ்துவ மிஷனரிகளின் துணையுடன்தான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததாக அவர் கூறியிருந்தார்.

இந்த விவகாரத்தில் சேலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ் மனுஷ் சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தனி நபர் புகார் மனு தாக்கல் செய்தார். இரு மதத்திற்கும் இடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கில் பொய்யான தகவலைப் பரப்புவதாகவும் இதனால் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சேலம் நீதிமன்றம் அண்ணாமலை விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது.

இந்த சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு தர வேண்டும் என்றும் அண்ணாமலை சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்தார். அதில் வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அண்ணாமலை, தமது பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஓராண்டுக்கு முன் அந்த பேச்சு ஒளிபரப்பப்பட்ட போதும், அதனால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் கூறியிருந்தர். இதனால் வழக்கை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இருப்பினும், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், வழக்கை ரத்து செய்ய மறுத்து அண்ணாமலை மனுவைத் தள்ளுபடி செய்தார். மேலும், அண்ணாமலையின் பேச்சு குறித்தும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடுமையாக விமர்சித்து இருந்தார். மேலும், அண்ணாமலைக்கு எதிரான வழக்கை சேலம் கீழமை நீதிமன்றம் பரீசிலிக்கும் என உத்தரவிட்டார்.

சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து அண்ணாமலை தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு செய்தனர். இந்த மனுவானது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும், அண்ணாமலை மனு குறித்து பியூஸ் மனுஷ் பதில் அளிக்கவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதேபோல தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேச்சின் முழு விவரத்தின் மொழிபெயர்ப்பையும் தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு அண்ணாமலைக்கு நிம்மதி தருவதாக அமைந்துள்ளது.


Next Story