செம்மண் குவாரி வழக்கு: அமைச்சர் பொன்முடி மீதான விசாரணை 29-ந் தேதிக்கு ஒத்திவைப்பு


செம்மண் குவாரி வழக்கு: அமைச்சர் பொன்முடி மீதான விசாரணை 29-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
x

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக அனுமதியை மீறி செம்மண் எடுத்து அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி உள்பட 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இவ்வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் இதுவரை 26 பேர் சாட்சியம் அளித்துள்ள நிலையில் 22 பேர் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். தொடர்ந்து, மற்ற சாட்சிகளின் விசாரணைக்காக இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜெயச்சந்திரன், சதானந்தன், கோபிநாத், கோதகுமார் ஆகிய 4 பேர் நேரில் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன் ஆகிய 3 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர். தொடர்ந்து, இவ்வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) ஹெர்மிஸ், இவ்வழக்கின் விசாரணையை வருகிற 29-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


Next Story