நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டி: சீமான் அறிவிப்பு


நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டி: சீமான் அறிவிப்பு
x
தினத்தந்தி 26 Sep 2023 11:56 AM GMT (Updated: 26 Sep 2023 12:48 PM GMT)

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

தஞ்சாவூர்,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;

"அதிமுக பாஜக கூட்டணி பிரிவை தற்காலிக பிரிவாக பார்க்கவில்லை. நிரந்தர பிரிவாக பார்க்கிறேன். இதுகுறித்து தலைமை பேசும் என அண்ணாமலை கூறியுள்ளார். அப்படியென்றால், இதற்கு முன்னர் அண்ணாமலை பேசியது எல்லாம் தலைமையின் உத்தரவு தானா என்ற கேள்வி வருகிறது.

தமிழ்நாட்டுக்கு உரிமையான காவிரி நதி நீரை உரிய அளவில் தர மறுத்து வரும் கர்நாடக அரசு, நீதிமன்ற உத்தரவுப்படி திறந்துவிடும் சொற்ப நீரையும் திறக்கக் கூடாது என கன்னட அமைப்புகள் போராடி வருவது சிறிதும் மனிதத்தன்மையற்ற கொடுஞ்செயலாகும். போராட்டத்தின் ஒரு பகுதியாக முதலமைச்சரை அவமதிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது." இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுமா, கூட்டணி சேர்ந்து போட்டியிடுமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, போட்டியிடுவேன், தனித்து போட்டியிடுவேன் என்று சீமான் பதிலளித்தார்.


Next Story