சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு: கட்டிட தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை


சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு: கட்டிட தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
x

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கரூர்

பாலியல் தொந்தரவு

கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முருகேசன், கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் 20-ந்தேதி 3-ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுவனை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் இதனை வெளியே கூறினால் கத்தியால் குத்திக்கொன்று விடுவேன் என மிரட்டி உள்ளார்.

இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கரூர் ஊரக அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர்.

20 ஆண்டுகள் சிறை

இந்த வழக்கு தொடர்பான விசாரணை கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்தநிலையில் விசாரணை முடிந்து இவ்வழக்கில் நீதிபதி நசீமா பானு நேற்று தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பில், சிறுவனை கடத்தி சென்ற குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், செலுத்த தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார்.

இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி முருகேசன் 20 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க உள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு இழப்பீடாக ரூ.3 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story