நாகையில் இருந்து இலங்கைக்கான கப்பல் போக்குவரத்து; 3 நாட்கள் மட்டும் நடைபெறும் என அறிவிப்பு


நாகையில் இருந்து இலங்கைக்கான கப்பல் போக்குவரத்து; 3 நாட்கள் மட்டும் நடைபெறும் என அறிவிப்பு
x
தினத்தந்தி 15 Oct 2023 8:45 AM IST (Updated: 15 Oct 2023 10:22 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் இருந்து இலங்கைக்கான கப்பல் போக்குவரத்து இனி திங்கள், புதன், வெள்ளி கிழமைகள் என்று 3 நாட்கள் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாகப்பட்டினம்,

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது என பிரதமர் மோடி-இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதனைத்தொடர்ந்து நாகை துறைமுகத்தில் இருந்து கப்பல் போக்குவரத்துக்கான அனைத்து பணிகளும் தொடங்கி முடிவடைந்தன. கடந்த 8-ந்தேதி நாகை-இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சோதனை ஓட்டமும் நடந்து முடிவடைந்தது.

இந்நிலையில், கடந்த 10-ந்தேதி தொடங்க இருந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து திடீரென ரத்து செய்யப்பட்டு 12-ந் தேதிக்கு மாற்றப்பட்டது. இதன்பின்னர் நிர்வாக காரணத்துக்காக மீண்டும் 14-ந்தேதிக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து 2 முறை கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று காலை 7 மணி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து காணொலிக்காட்சி மூலம் புதுடெல்லியில் இருந்தபடி நேற்று காலை பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி துறை மற்றும் ஆயுஷ் துறைக்கான மந்திரி சர்பானந்தா சோனோவால் கலந்து கொண்டார். அவர், கொடியசைத்து வைத்ததும், கப்பல் போக்குவரத்து தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் காணொலி காட்சி வழியே கலந்து கொண்டார்.

இதன்பின்னர், பிரதமர் மோடி பேசும்போது, இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே தூதரக மற்றும் பொருளாதார உறவுகளில் நாம் புதிய அத்தியாயம் ஒன்றை தொடங்கியிருக்கிறோம். நம்முடைய உறவுகளை வலுப்படுத்துவதில், நாகை மற்றும் காங்கேசன்துறை இடையேயான கப்பல் போக்குவரத்து தொடக்கம் ஒரு முக்கியம் வாய்ந்த மைல்கல்லாக உள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும், கலாசாரம், வர்த்தகம் மற்றும் நாகரீகத்தில் ஒரு ஆழ்ந்த வரலாற்றை பகிர்ந்து வருகிறது என்றும் வர்த்தகம், சுற்றுலா மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்தும் மற்றும் இரு நாடுகளின் இளைஞர்களுக்கு வாய்ப்புகளையும் அது உருவாக்கும் என்றும் அவர் பேசினார்.

இந்த சூழலில், போதிய பயணிகள் முன்பதிவு செய்யவில்லை. இதனால், கப்பல் போக்குவரத்து இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இனி திங்கள், புதன், வெள்ளி கிழமைகள் என்று 3 நாட்கள் மட்டும் கப்பல் போக்குவரத்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story