ஸ்பெயின் பயணம் சாதனைப் பயணமாக அமைந்தது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி


தினத்தந்தி 7 Feb 2024 3:08 AM GMT (Updated: 7 Feb 2024 5:40 AM GMT)

10 நாட்கள் ஸ்பெயின் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை வந்தடைந்தார்.

சென்னை,

பல்வேறு தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார். கடந்த மாதம் ஜனவரி 27-ந் தேதி ஸ்பெயின் புறப்பட்டுச் சென்ற அவர் பல்வேறு தொழில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான மிகவும் சாதகமான சூழ்நிலைகளைப் பற்றி அவர்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தார். அதன் மூலம் சில நிறுவனங்கள், தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன.

இந்த நிலையில் 10 நாட்கள் ஸ்பெயின் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையம் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள், தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்றனர்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

உங்கள் வாழ்த்துகளை எல்லாம் பெற்று ஸ்பெயின் நாட்டுக்குச் சென்ற நான் தமிழ்நாட்டுக்குப் பல்வேறு முதலீடுகளை ஈர்த்துவிட்டுத் திரும்பி இருக்கிறேன். அந்த வகையில் இது மிகப்பெரிய சாதனைப் பயணமாக அமைந்திருக்கிறது.

தமிழ்நாட்டில், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அரசு முறைப் பயணமாக ஸ்பெயின் நாட்டுக்கு கடந்த 29-ம் தேதி சென்றேன். முதல் நிகழ்வாக, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த முன்னணி தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் பங்கேற்கும் முதலீட்டாளர் மாநாடு நடந்தது. அதற்கு ஸ்பெயின் நாட்டில் இருக்கின்ற பல்வேறு தொழில்துறை குழும நிர்வாகிகள் எல்லாம் வந்திருந்தார்கள்.

மாநாட்டில் தமிழ்நாட்டில், தொழில் தொடங்குவதற்கு இருக்கக்கூடிய உகந்த சூழல் பற்றி எடுத்துச் சொல்லி, நம்முடைய மாநிலத்தில் முதலீடுகளை மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினேன். அதன் தொடர்ச்சியாக, அடுத்தடுத்த நாட்களில் ஸ்பெயின் நாட்டில் செயல்படுகின்ற முன்னணி நிறுவனங்களுடைய நிர்வாகிகளை தனித்தனியாக நேரில் சந்தித்து கலந்துரையாடினேன்.

தமிழ்நாட்டில் முதலீடு செய்யவேண்டும் என்று அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். இந்த நிறுவனங்களின் நிர்வாகிகள் எல்லோரும் தங்களுடைய தொழில் திட்டங்களையும் விளக்கியும், தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு தங்களுடைய ஆர்வத்தையும் தெரிவித்தார்கள். இந்த முயற்சிகளின் பயனாக, ரூ.3,440 கோடி அளவுக்கு முதலீடுகள் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

1. ஹபக் லாய்டு நிறுவனம் 2,500 கோடி ரூபாய் முதலீடு.

2. எடிபான் நிறுவனம் 540 கோடி ரூபாய் முதலீடு.

3. ரோக்கா நிறுவனமும் 400 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக உறுதியளித்திருக்கிறது.

இந்த நிறுவனங்கள் மட்டுமில்லாமல், மற்ற நிறுவனங்களும் அடுத்தடுத்து எதிர்காலத்தில் தங்களுடைய முதலீடுகளை மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தமிழ்நாடு குறித்தும், கழக அரசு குறித்தும் உலகளாவிய தொழில் நிறுவனங்களுக்கு உள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியையும், தமிழ்நாட்டின் பொருளாதார மேம்பாட்டையும் புகழ்ந்து 'ஆங்கில செய்தித்தாள்' வெளியிட்டுள்ள செய்தியை நீங்கள் எல்லோரும் படித்திருப்பீர்கள்.

உற்பத்தித் துறையில் சீனாவுக்கு மாற்றாக, இந்தியா கருதப்பட்டு வரும் இந்த வேளையில், அந்த உற்பத்தித் துறையில் முந்திச் செயல்படுகின்ற மாநிலமாக தமிழ்நாடு முன்னேறி வருவதையும், பெரும் அளவிலான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய முதலீடுகள் பல தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் அந்தச் செய்தி சுட்டிக்காட்டி இருக்கிறது.

இந்தியா பயணிக்கக் கூடிய பாதையில், முந்தி பயணிப்பது மட்டுமல்ல, தமிழ்நாடு தனக்கென்று தனிப்பாதை ஒன்றை வகுத்துச் செயல்பட்டு வருவதாகவும், முதல் பக்கத்தில் ஆங்கில பத்திரிகையில் வெளியிட்டிருக்கிறது, அதை பாராட்டியும் இருக்கிறது. இது போன்ற பாராட்டுகள்தான் எங்களை மேலும் உற்சாகப்படுத்தி செயல்பட வைக்கிறது. தமிழ்நாட்டை தொழில்துறையில் தலைசிறந்த மாநிலமாக உயர்த்தும் எங்கள் பயணத்துக்கு ஸ்பெயின் பயணம் மிகமிக பயனுள்ளதாக அமைந்திருக்கிறது. இது போன்ற அடுத்தடுத்த பயணங்கள் திட்டமிடப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி:- தற்போது நீங்கள் வெளிநாடுகளில் பயணம் மேற்கொண்டு வரும்போது முதலீடுகள் அதிகளவு ஈர்க்கபடுகிறது. இதற்கு அடுத்த கட்டமாக முதலீடுகளை ஈர்ப்பதற்காக, வேறு நாடுகளுக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறதா?

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்:- திட்டமிடும்போது உங்களிடம் சொல்லிவிட்டு செய்கிறேன். நாடாளுமன்றத் தேர்தல் இப்போது நெருங்கி வருவதால், அதற்குப் பிறகுதான் என்னுடைய பயணங்கள் இருக்கும்.

கேள்வி:- நாடாளுமன்றத்தில் பிரதமர் உரை நிகழ்த்தியிருக்கிறார். பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். அது தொடர்பாக, அந்த நிகழ்வுகளை எல்லாம் நீங்கள் பார்த்தீர்களா?

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்:- பார்த்தேன். படித்தேன். ரசித்தேன். சிரித்தேன். ஏனென்றால், பா.ஜனதா தான் எதிர்க்கட்சி போலவும், காங்கிரஸ் ஆளுங்கட்சி போலவும், அவர் தொடர்ந்து ஆட்சிக்கு வந்ததிலிருந்து, எதிர்க்கட்சியாக அவர் செயல்பட்டுக் கொண்டு, ஆளுங்கட்சியாக காங்கிரஸ் இருப்பது போல தாக்குதல் செய்வது போலவும் பேசிக் கொண்டிருக்கிறார். இதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

கேள்வி:- பிரதம மந்திரி பேசும்போது 400 இடங்களை நாடாளுமன்ற தேர்தலில் கைப்பற்றுவோம் என்று சொல்லி இருக்கிறார்? அதுபற்றிய தங்களது கருத்து.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்:- மொத்தம் 400 தானா? 543 இடங்கள் இருக்கிறது. அதையும் கைப்பற்றுவேன் என்று சொன்னாலும் ஆச்சரியம் இல்லை.

கேள்வி:- நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கி இருக்கிறார்? எப்படி பார்க்கிறீர்கள்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்:- மக்களுக்குத் தொண்டாற்ற யார் வந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story