நெல்லையில் வெள்ளத்தால் இழந்த ஆவணங்களைப் பெற திங்கட்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் - கலெக்டர் அறிவிப்பு


நெல்லையில் வெள்ளத்தால் இழந்த ஆவணங்களைப் பெற திங்கட்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் - கலெக்டர் அறிவிப்பு
x

சிறப்பு முகாம்களில் புதிய ஆவணங்களை கட்டணமின்றி வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நெல்லை,

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18-ந் தேதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பல்வேறு இடங்களில் மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து பெரும் அவதிக்குள்ளாகினர்.

இதைத் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில் பாதிப்புக்கு ஏற்றவாறு ரூ.6,000 மற்றும் ரூ.1,000 நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. மேலும் அரசு மற்றும் பல்வேறு தனியார் அமைப்புகள் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் வெள்ளத்தால் தங்கள் ஆவணங்களை இழந்த மக்களுக்கு புதிய ஆவணங்களை வழங்கிட திங்கட்கிழமைதோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

இதன்படி சிறப்பு முகாம்களில் புதிய ஆவணங்களை கட்டணமின்றி வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள 8 வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் திங்கட்கிழமைதோறும் சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




Next Story