சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 27 Sep 2023 7:30 PM GMT (Updated: 27 Sep 2023 7:30 PM GMT)

புரட்டாசி மாத பிரதோஷத்தை தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி

புரட்டாசி மாத பிரதோஷத்தை தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பிரதோஷ சிறப்பு வழிபாடு

தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் நேற்று புரட்டாசி மாத பிரதோஷத்தை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டையொட்டி நந்தி மற்றும் லிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி நகரில் பிரசித்தி பெற்ற கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜூன சாமி கோவிலில் புரட்டாசி மாத பிரதோஷ சிறப்பு வழிபாடு நேற்று மாலை நடைபெற்றது. முதலில் நந்திக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் மற்றும் பழங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் உபகார பூஜைகளும், தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்திலேயே சாமி திருவீதி உலா நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த வழிபாட்டையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது

நெசவாளர் நகர்

இதேபோன்று தர்மபுரி நெசவாளர் நகரில் உள்ள மங்களாம்பிகை உடனாகிய மகாலிங்கேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பிரதோஷத்தை நந்தி மற்றும் மகா லிங்கேஸ்வரருக்கு விபூதி, சந்தனம், பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திரளான பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவகாமசுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜர் கோவிலில் நடைபெற்ற புரட்டாசி மாத பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பிரதோஷ வழிபாடு

இதேபோல் தர்மபுரி கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவாணேஸ்வரர் கோவில், அன்னசாகரம் சாலையில் உள்ள சித்திலிங்கேஸ்வரர் கோவில், தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள பிரகதாம்பாள் சமேத அருளீஸ்வரர் கோவில், அன்னசாகரம் சோமேஸ்வரர் கோவில், சவுலுப்பட்டி ஆதி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட தர்மபுரி நகரை சுற்றியுள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் புரட்டாசி மாத பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதேபோன்று மாவட்டத்தின் முக்கிய கோவில்களான தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், ஒகேனக்கல் தேசநாதேஸ்வரர் கோவில், காரிமங்கலம் மலையில் உள்ள அருணேஸ்வரர் கோவில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோவில்களிலும் புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி பையர்நத்தம் கிராமத்தில் மயிலை மலை பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த மலைக்கோவில் அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள அமிர்தேஸ்வரர், அன்னை அமிர்தாம்பிகை கோவிலில் புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி பக்தர்கள் வழிபட்டனர். பிரதோஷத்தையொட்டி நந்தி பெருமானுக்கு, பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், தேன், இளநீர், எலுமிச்சை, தயிர், அபிஷேக பொடி உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து நந்தி பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story