காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அரசு துறைகளில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்


காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அரசு துறைகளில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
x

காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அரசு துறைகளில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சிபுரம்

தமிழ்நாட்டில் விளையாட்டு மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகள், திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் சார்பாக ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்-வீராங்கனைகளை ஊக்குவித்திடும் வகையில் அவர்களுக்கு அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு பெறுவதற்கு கீழ்காணும் விளையாட்டுப்போட்டிகளில் 01-01-2018 அன்றோ அல்லது அதன் பிறகு பெற்ற சாதனைகள் தகுதியானவையாக கருதப்படும்.

ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகள், ஆசிய விளையாட்டுப்போட்டிகள், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பால் நடத்தப்படும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள், ஐ.ஓ.சி.யால் அங்கீகரிக்கப்பட்ட ஐ.எஸ்.எப்.யின் கீழ் நடத்தப்படும் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கேற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு சங்கம் காது கேளாதோருக்கான சர்வதேச விளையாட்டுக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். இதைபோல தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளால் நடத்தப்படும் தேசிய சாம்பியன்ஷிப் விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள்.

மேலும் 40 வயதிற்குட்பட்டவர்கள் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற இயலும்.

விண்ணப்பதாரர் வேலைவாய்ப்பு பெற்றிடுவதற்கான இதர முழு தகுதிகளும் பெற்றிருத்தல் வேண்டும். காஞ்சீபுரத்தை மாவட்டதை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மேற்காணும் வழிகாட்டுதலின்படி 3 சதவித இட ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு பெறுவதற்கான விண்ணப்பங்களை www.sdat.tn.gov.in எனும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

அதை பூர்த்தி செய்து உரிய இணைப்புகளுடன் 31-ந் தேதி மாலை 5 மணிக்குள் மேற்காணும் இணையதள முகவரி அல்லது நேரு விளையாட்டரங்கில் இயங்கிவரும் தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பத்தினை சமர்பிக்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story