வங்கக்கடலில் உருவானது 'மிக்ஜம்' புயல்...!


வங்கக்கடலில் உருவானது மிக்ஜம் புயல்...!
x
தினத்தந்தி 3 Dec 2023 3:16 AM GMT (Updated: 3 Dec 2023 4:39 AM GMT)

புயல் காரணமாக இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் அநேக இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவை தந்து வருகிறது.

இந்த நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு 'மிக்ஜம்' என பெயரிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 310 கி.மீ. தென்கிழக்கு திசையில் புயல் நிலை கொண்டுள்ளது. தற்போது 5 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று வட தமிழகத்தை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான மிக்ஜம் புயல் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே 5-ம் தேதி மாலை கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் அந்த பகுதிகளில் சுமார் 90 முதல் 100 கி.மீ. வரையிலான வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த புயல் காரணமாக இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், டெல்டா மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் சில இடங்களிலும் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story