படிக்க சொல்லி கண்டித்த ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவர்கள்... சிவகாசி அருகே பரபரப்பு...!


படிக்க சொல்லி கண்டித்த ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவர்கள்... சிவகாசி அருகே பரபரப்பு...!
x

சிவகாசி அருகே படிக்க சொல்லி கண்டித்த அரசு பள்ளி ஆசிரியரை மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் எஸ்.ஆர்.என் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பொருளாதார பிரிவு ஆசிரியராக கடற்கரை (வயது 42) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இரண்டு பேரை நன்றாக படிக்க சொல்லி கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக மாணவர்கள் இரண்டு பேரும் அவர் மீது கடுமையான கோபத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை ஆசிரியர் வழக்கமாக பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மாணவர்கள் இருவரும் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் அவரை தலையில் தாக்கி விட்டு தப்பி ஓடி உள்ளனர்.

ஆசிரியரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தின் பேரில் வழக்கு பதிவு செய்த விருதுநகர் டி.எஸ்.பி தலைமையிலான 4 தனிப்படை போலீசார் தப்பி ஓடிய மாணவர்களை தேடி வருகின்றனர். மேலும் மாணவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story