பெண்ணை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் ஆயுத படைக்கு மாற்றம்


பெண்ணை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் ஆயுத படைக்கு மாற்றம்
x

பெண்ணை தாக்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆயுத படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

சென்னை

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தாயார் குளம் பகுதியை சேர்ந்தவர் பிரியா. இவருக்கும், காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவில் போலீசாக பணியாற்றிய சோமு என்ற சோமசுந்தரத்துக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சிலநாட்களாக அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரியாவுக்கு போலீசார் மூலம் அடிக்கடி சோமசுந்தரம் தொந்தரவு செய்துவந்ததாகவும், பிரியாவின் தம்பியை வழக்கு ஒன்றில் பிடித்து கொடுத்து சிறையில் அடைத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் சோமசுந்தரத்தின் வீட்டுக்கு சென்று பிரியா அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் காஞ்சீபுரம் பகுதியில் பணியாற்றி வந்த சோமசுந்தரம் உத்திரமேரூர் அடுத்த பெருநகர் போலீஸ்நிலையத்துக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டார்.

கடந்த 18-ந் தேதி பிரியா பெருநகர் போலீஸ் நிலையத்துக்கு சென்று சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரத்திடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சோமசுந்தரம் போலீஸ் நிலைய வாசலிலேயே சக போலீசார் முன்னிலையில் பிரியாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

இதை அங்கு இருந்த போலீசார் செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்து அறிந்த போலீஸ் உயரதிகாரிகள் பெருநகர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சோமசுந்தரத்தை தற்போது ஆயதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டனர்.


Next Story