கிராம மக்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பேச்சுவார்த்தை


கிராம மக்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 25 Oct 2023 7:00 PM GMT (Updated: 25 Oct 2023 7:00 PM GMT)

சுரண்டை அருகே கிராம மக்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.

தென்காசி

சுரண்டை:

சுரண்டை அருகே அச்சங்குன்றம் கிராமத்தில் கிறிஸ்தவ ஆலயம் விரிவாக்கம் செய்வதில், புறம்போக்கு இடத்தில் ஆலயம் கட்டுவதாக கூறி இருதரப்பினருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பினர் ஆலய நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் பள்ளியில் படித்த தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்தினர். இது தொடர்பாக புதிதாக அரசு பள்ளி அமைக்க கோரிக்கை விடுத்து அவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று திடீரென தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் அச்சங்குன்றம் கிராமத்திற்கு வந்தார். அங்கு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம் நடத்தி வரும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

குழந்தைகள் கல்வி பெறுவது அவர்களின் உரிமை, இதை தடுத்ததால் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக விளக்கிக் கூறினார். பெரியவர்கள் தங்களுக்கு இடையேயான பிரச்சினையில் குழந்தைகளை பாதிக்கும் படி நடந்து கொள்ள கூடாது. குழந்தை கல்வியை மறுக்கக்கூடாது என எடுத்துக் கூறி உடனடியாக ஏதாவது ஒரு பள்ளியில் குழந்தைகளை சேர்த்து கல்வி வழங்கவும், பின்னர், அரசு பள்ளி கேட்டு அரசுக்கு விண்ணப்பிக்கவும் என கேட்டுக் கொண்டார்.

இந்த பேச்சுவார்த்தையில் கூடுதல் சூப்பிரண்டுகள் தேவன், ரமேஷ், மாவட்ட கல்வி அலுவலர் லோகநாதன், கிராம நிர்வாக அலுவலர் அந்தோணிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story