திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்... அலைகடலென திரண்ட பக்தர்கள்.!


திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்... அலைகடலென திரண்ட பக்தர்கள்.!
x
தினத்தந்தி 18 Nov 2023 1:28 AM GMT (Updated: 18 Nov 2023 2:48 AM GMT)

சூரசம்ஹாரத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால், திருச்செந்தூர் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

திருச்செந்தூர்,

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா கடந்த 13-ந்தேதி அதிகாலை யாக சாலை பூஜையுடன் தொடங்கியது.

கந்தசஷ்டி திருவிழாவையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருச்செந்தூர் வரும் பக்தர்கள், கோவிலில் தங்கி விரதம் மேற்கொண்டு வருகின்றனர். கோவிலின் வளாகத்தில் மேம்பாட்டுப்பணிகள் நடைபெற்று வருவதால் பக்தர்கள் கோவிலின் வெளிவளாகத்தில் தங்கி விரதம் இருந்து வருகின்றனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை கடற்கரையில் நடைபெற உள்ளது. சூரசம்ஹாரத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால், திருச்செந்தூர் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 3,000 போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கடற்கரையில் தீயணைப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கடற்கரை உள்ளிட்ட இடங்களில் 12 கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் பெரிய எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை உள்ளிட்ட ஊர்களில் இருந்து திருச்செந்தூருக்கு 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோவில் வளாகத்தில் குடிநீர், சுகாதாரம், மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


Next Story