தமிழக காவல்துறையினர் யாருடைய ஏஜென்சியாக செயல்படுகிறார்கள்? - ஐகோர்ட்டு கேள்வி


தமிழக காவல்துறையினர் யாருடைய ஏஜென்சியாக செயல்படுகிறார்கள்? - ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 9 Nov 2023 10:29 AM GMT (Updated: 9 Nov 2023 10:31 AM GMT)

ஆளுங்கட்சியினருக்கு மட்டும்தான் காவல்துறையினர் அனுமதி வழங்குவார்களா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

சென்னை,

பா.ம.க.வின் கொள்கை குறித்து மோட்டார் சைக்கிள் பேரணி பிரச்சாரம் நடத்த ராணிப்பேட்டை காவல்துறையினர் அனுமதி மறுத்ததை எதிர்த்து ராணிப்பேட்டை பா.ம.க. செயலாளர் சரவணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், மாரத்தான் ஓடுவதற்கும் நடப்பதற்கும் அனுமதி வழங்கும்போது, மதுவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கினால் என்ன? என்றும், ஆளுங்கட்சியினருக்கு மட்டும்தான் காவல்துறையினர் அனுமதி வழங்குவார்களா? என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை நடத்தினால் மத்திய அரசு ஏஜென்சி என்று குற்றம்சாட்டும்போது, தமிழக காவல்துறையினர் யாருடைய ஏஜென்சியாக செயல்படுகிறார்கள்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

ராணிப்பேட்டையில் கடந்த மாதம் ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்த வழங்கப்பட்ட அனுமதி குறித்த விவரங்களை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதி, ஒருவேளை யாருக்கேனும் அனுமதி வழங்கியிருந்தால், டி.எஸ்.பி. நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்படும் என்று கூறி விசாரணையை 17-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.



Next Story