மியான்மருக்கு கடத்திச் செல்லப்பட்ட தமிழக இளைஞர்களை மீட்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்


மியான்மருக்கு கடத்திச் செல்லப்பட்ட தமிழக இளைஞர்களை மீட்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 Sep 2022 11:10 AM GMT (Updated: 21 Sep 2022 3:38 AM GMT)

மியான்மருக்கு கடத்திச் செல்லப்பட்ட தமிழக இளைஞர்களை மீட்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"தாய்லாந்து நாட்டிற்கு வேலை தேடிச் சென்ற தமிழக இளைஞர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மியான்மர் நாட்டுக்கு கடத்திச் சென்று, சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுத்தி, கொடுமைப்படுத்துவதாக வரும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.

அவர்களை உடனடியாக மீட்க மத்திய அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வேலையின்மையால் படித்த இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று சம்பாதித்து, குடும்பத்தைக் காப்பாற்ற முயற்சிக்கின்றனர். வெளிநாட்டில் வேலைவாங்கித் தருவதாகக் கூறும் போலி நிறுவனங்களும், சில முகவர்களும் லட்சக்கணக்கில் பணத்தைப் பிடுங்கிக் கொண்டு, தமிழக இளைஞர்களை சிக்கலில் மாட்டிவிடுகின்றன.

எனவே, வெளிநாடுகளில் பாதுகாப்பற்ற சூழலில் உள்ள இளைஞர்கள் அனைவரையும் மீட்பதுடன், பிற நாடுகளில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி தமிழக இளைஞர்களை ஏமாற்றும் நிறுவனங்கள் மற்றும் முகவர்களைக் கட்டுப்படுத்தி, இனியும் இதுபோல நேரிடாத வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story