'மத்திய அரசுப் பணிகளில் தமிழக இளைஞர்கள் அதிக அளவில் சேர வேண்டும்' - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


மத்திய அரசுப் பணிகளில் தமிழக இளைஞர்கள் அதிக அளவில் சேர வேண்டும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
x

பொதுத்துறை வங்கிகளில் வேறு மொழி பேசுபவர்களே அதிகளவில் மேலாளர்களாக இருக்கிறார்கள் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை,

'நான் முதல்வன்' திட்டத்தின் போட்டித் தேர்வுகள் பிரிவின் கீழ் மத்திய அரசின் தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அரசுப் பணிகளில் தமிழக இளைஞர்கள் அதிக அளவில் சேர வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் கூறியதாவது;-

"ஒரு காலத்தில் யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவு வந்தால் 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை நம்முடைய தமிழ்நாட்டு தேர்வர்கள் வென்றார்கள். இன்றைக்கு அந்த நிலை இல்லை. மாறிக்கொண்டு வந்து கொண்டிருக்கிறது. எனவே தான், எந்த மத்திய அரசு அலுவலகங்களுக்கு சென்றாலும் நம்முடைய மாநிலத்தவர்கள் அதிகாரிகளாக இருப்பது சிறிது காலமாக, ஆண்டுக்காண்டு அது குறைந்து கொண்டே வருகின்றது.

பல குக்கிராமங்களில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் இந்தி உள்ளிட்ட வேறு மொழி பேசுபவர்களே அதிகளவில் மேலாளர்களாக இருக்கின்றார்கள். அதனால் தான் இங்கிருக்கக்கூடிய நம்முடைய பாமர மக்கள் வயதான குடிமக்கள், வங்கி சேவைகள் பெறுவதில் கொஞ்சம் சிரமப்படுகிறார்கள். மொழி ஒரு தடையாக இருப்பதால் அரசு சேவைகள் சென்றடைவதில் ஒரு தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே மத்திய அரசு தேர்வுகளில் தமிழ் நாட்டு மாணவர்களும், அதிக அளவில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு தான் இந்த நான் முதலில் போட்டித் தேர்வுகளை நான் கடந்த மார்ச் மாதம் 7-ந்தேதி தொடங்கி வைத்தேன். எஸ்.எஸ்.சி., ரெயில்வே, மத்திய வங்கிப் பணி போன்ற தேர்வுகளுக்குக் கட்டணம் இல்லாமல் 100 நாட்களுக்கு பயிற்சி பெறும் இந்த திட்டத்திற்கு மாணவர்கள் மத்தியிலும், போட்டித்தேர்வு ஆர்வலர்களிடமும் மிகப்பெரிய அளவில் வரவேற்பதை நாம் காணமுடிகிறது.

இந்தப் பிரிவு தொடங்கி வைக்கப்பட்ட மூன்றே மாதங்களில் இன்றைக்கு 29,024 விண்ணப்பங்கள் வந்துள்ளன. பத்தாம் வகுப்பு மதிப்பெண், பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண், பட்டப்படிப்பில் பெற்றுள்ள சதவீதம் மற்றும் இடஒதுக்கீட்டு முறையில் 6,900 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன.

அதனால் கூடுதல் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு இன்று முதல் செயல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னையில் மட்டுமே 3,042 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதிலிருந்து 450 பேரை தேர்வு செய்து, சென்னை மாவட்டத்தில் மட்டும் இன்று 3 பயிற்சி மையங்கள் துவங்கப்பட உள்ளன. அதில் ஒரு தேர்வு மையம் தான் இன்று நாம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் தொடங்கி வைத்துள்ளோம்.

இதன் மூலமாக யு.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., இந்திய ரெயில்வே ஆகிய தேர்வுகளுக்கு அதிக அளவிலான தேர்வாளர்களை நிச்சயம் தயார்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது."

இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.




Next Story