இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் - போக்சோ சட்டத்தில் கைது


இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் - போக்சோ சட்டத்தில் கைது
x

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

சென்னை

சென்னை சூளைமேட்டை சேர்ந்த 8-ம் வகுப்பு படித்து வரும் 13 வயதான தங்கள் மகளை காணவில்லை என சூளைமேடு போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் செல்போன் சிக்னலை வைத்து விசாரித்தனர். அதில் மாணவி, மாமல்லபுரத்தில் உள்ள விடுதியில் இருப்பது தெரிந்தது.

போலீசார் அங்கு சென்று சோதனை செய்தபோது, மாயமான மாணவியுடன் வாலிபர் ஒருவர் இருப்பதை கண்டனர். பின்னர் இருவரையும் போலீசார் சென்னை அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில் அந்த வாலிபர் செங்கல்பட்டை சேர்ந்த துளசிதரன் (வயது 24) என்பது தெரியவந்தது. இவருக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்தநிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை மாமல்லபுரம் அழைத்துச்சென்று விடுதியில் வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

இந்த வழக்கு அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில் போலீசார் துளசிதரன் மீது கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


Next Story