மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானைக்கு சிகிச்சை அளிக்க தாய்லாந்து டாக்டர்கள் வருகை


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பார்வதி யானைக்கு சிகிச்சை அளிக்க தாய்லாந்து டாக்டர்கள் வந்துள்ளனர்.

மதுரை:

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பார்வதி என்ற யானை (வயது 26) உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு யானையின் இடது கண்ணில் கண்புரை பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் இரண்டாம் கண்ணிலும் கண்புரை பரவ தொடங்கியது. இதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அதில் முன்னேற்றம் இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் இதில் சிறப்பு வாய்ந்த தாய்லாந்து டாக்டர் மூலம் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.

அதற்காக தாய்லாந்து மருத்துவர்கள் இரண்டு முறை வீடியோ கான்பரண்ஸ் வழியாக பார்வதி யானையை பார்வையிட்டு எந்த மாதிரியான சிகிச்சை அளிக்க வேண்டுமென பரிந்துரை செய்து வந்தனர்.

இந்த நிலையில் யானைக்கு சிகிச்சை அளிக்க தாய்லாந்து கசிசார்ட் பல்கலைக்கழக கால்நடை இணை பேராசியர் நிக்ரோன் தோங்திப் தலைமையிலான 7 பேர் கொண்ட கால்நடை மருத்துவக் குழு நேற்று மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தது. அவர்கள் யானை பார்வதியை நேரில் பார்வையிட்டு அதற்கு கண்புரை பாதிப்பு எந்த அளவு உள்ளது. எந்த மாதிரியான சிகிச்சை அளிக்க வேண்டுமென ஆய்வு செய்தனர்.

இதற்கிடையில் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாய்லாந்து மருத்துவக் குழுவிடம் யானை பார்வதிக்கு கண் பாதிப்புகளை கட்டுப்படுத்த தேவையான சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

இதில் மதுரை மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர், கோவில் துணை கமிஷனர் அருணாச்சலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story