காவலில் எடுத்த 2 பேரை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை


காவலில் எடுத்த 2 பேரை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை
x
தினத்தந்தி 27 Sep 2023 8:00 PM GMT (Updated: 27 Sep 2023 8:01 PM GMT)

கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக காவலில் எடுத்த 2 பேரை கோவைக்கு அழைத்து வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

கோயம்புத்தூர்

கோவை

கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக காவலில் எடுத்த 2 பேரை கோவைக்கு அழைத்து வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

கார் வெடிப்பு வழக்கு

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து ஜமேஷா முபினின் கூட்டாளிகள் முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து தேசிய புலனாய்வு முகமைக்கு(என்.ஐ.ஏ.) வழக்கு மாற்றப்பட்டது. அவர்கள் இந்த வழக்கில் தொடர்புடைய உமர்பரூக், பெரோஸ்கான், முகமது தவ்பிக் ஆகிய மேலும் 3 பேரை கைது செய்தனர். இவர்கள் மீது சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

காவலில் எடுத்து விசாரணை

இதன் தொடர்ச்சியாக உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த முகமது இத்ரிஸ், அன்பு நகரை சேர்ந்த முகமது அசாருதீன் என்ற அசார் ஆகிய 2 பேரும் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இது தவிர கேரள மாநிலம் பையூர் சிறையில் உள்ள மற்றொரு முகமது அசாருதீனுக்கும், இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அவரையும், என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

இதையடுத்து முகமது இத்ரிஸ், முகமது அசாருதீன் என்ற அசார் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. கோர்ட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அவர்களை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவைக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

வீடுகளுக்கு அழைத்து சென்று...

இந்த நிலையில் நேற்று காலை முகமது இத்ரிஸ் மற்றும் முகமது அசாருதீனை கோவை உக்கடத்தில் உள்ள அவர்களின் வீடுகளுக்கு நேரில் அழைத்து சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர்கள் ரகசியமாக சந்தித்து பேசிய இடங்கள், ஒன்றாக படித்த அரபி கல்லூரி என அவர்கள் எங்கெல்லாம் சந்தித்து கொண்டார்களோ அந்தந்த இடங்களுக்கு எல்லாம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், அந்த இடங்களின் இருப்பிடத்தை ஜி.பி.எஸ். கருவி மூலம் பதிவு செய்து கொண்டனர். அதன்பின்னர் அவர்களை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்றனர். காவல் முடிந்ததை தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) அவர்களை சென்னை பூந்தமல்லி கோர்ட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆஜர்படுத்த உள்ளனர்.


Next Story