குளத்தில் மூழ்கி சிறுமி பலி


குளத்தில் மூழ்கி சிறுமி பலி
x

குளத்தில் மூழ்கி சிறுமி உயிரிழந்தாள்.

அரியலூர்

மீன்சுருட்டி:

டிரைவர்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். லாரி டிரைவர். இவருடைய மனைவி கார்குழலி. இவர்களுடைய மகள் ஜெனிஷாஸ்ரீ (வயது 7) ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள். மீண்டும் கர்ப்பமாக இருந்த கார்குழலிக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது.

இதையடுத்து அவரது அக்காள் செவ்வந்தி, குழந்தையை பார்க்க சென்றதாக தெரிகிறது. அப்போது கார்குழலி, ஜெனிஷாஸ்ரீயை மீன்சுருட்டி அருகே கங்கவடங்க நல்லூர் கிராமத்தில் வன்னியர் தெருவில் உள்ள தனது தாயார் லெட்சுமி வீட்டில் விடுமாறு கூறியுள்ளார். அதன்படி அவர் அழைத்து சென்றுள்ளார்.

குளத்தில் மூழ்கி சாவு

இந்நிலையில் நேற்று மதியம் பாட்டி வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்த ஜெனிஷாஸ்ரீயை சிறிது நேரத்தில் காணவில்லை. இதனால் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து ஜெனிஷாஸ்ரீ விளையாடிக் கொண்டிருந்த இடத்தில் கால் தடத்தை வைத்து பின் தொடர்ந்து சென்று பார்த்தபோது அருகில் உள்ள குளத்தில் இறங்கியது தெரியவந்தது.

இதையடுத்து குளத்தில் இறங்கி தேடி, தண்ணீரில் மூழ்கிய சிறுமியை மீட்டனர். பின்னர் ஜெனிஷாஸ்ரீயை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மீன்சுருட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர், அவள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து மீன்சுட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story