சேரி மொழியில் பேச முடியாது என்று பதிவிட்ட விவகாரம்: குஷ்புவுக்கு எதிராக விசிக புகார்


சேரி மொழியில் பேச முடியாது என்று பதிவிட்ட விவகாரம்: குஷ்புவுக்கு எதிராக விசிக புகார்
x

நடிகை குஷ்புவுக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சமீபத்தில் நடிகை திரிஷா குறித்த மன்சூர் அலிகானின் சர்ச்சைப் பேச்சு தொடர்பாக எக்ஸ் தளத்தில் ஒருவருக்கு நடிகை குஷ்பு பதிலளித்திருந்தார். அதில் அவர், "திமுக குண்டர்கள் இப்படியான மோசமான மொழியைத் தான் பயன்படுத்துவார்கள். அவர்களுக்கு கற்பிக்கப்பட்டது இது தான். சாரி, என்னால் உங்களைப் போல சேரி மொழியில் பேச முடியாது.

ஆனால் என்ன நடந்தது, என்ன பேசினார்கள், என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து கண் விழித்துப் பாருங்கள். மேலும் திமுக உங்களுக்கு சட்டங்களை கற்றுத்தரவில்லை என்றால், நீங்கள் ஒரு வழக்கறிஞராக இருப்பது வெட்கக்கேடானது" என்று பதிவிட்டிருந்தார். குஷ்பு தனது பதிவில், 'சேரி மொழி' என பயன்படுத்தியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

பெண்களை இழிவுபடுத்தும் மோசமான வார்த்தைகளுக்கு 'சேரி மொழி' என முத்திரை குத்துகிறார் குஷ்பு, இதற்கு அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கடும் எதிர்வினைகள் எழுந்தன. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நடிகை குஷ்புவுக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், குஷ்பு மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



Next Story