பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு பாசி மணி அணிவித்த நரிக்குறவ மக்கள்...!

புதுக்கோட்டையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலைக்கு நரிக்குறவ மக்கள் பாசி மணி அணிவித்தனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
புதுக்கோட்டை என்றால் நாட்டுப்பற்று மிகுந்த ஊர். இங்கிருந்து தான் சத்தியமூர்த்தி, டாக்டர் முத்துலெட்சுமி போன்றவர்கள் வந்துள்ளனர். புதுக்கோட்டை தமிழ்நாட்டில் இருந்து புறக்கணிக்கப்பட்ட மாவட்டமாக உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தனி கவனம் செலுத்தி முன்னேற அனைத்து நடவடிக்கையும் நாங்கள் மேற்கொள்வோம். இந்த சுதந்திர தினத்தில் 40 லட்சம் தேசிய கொடியை நாம் கொடுத்துள்ளோம். தி.மு.க. ஆட்சியில் சாதி, மத பேதம் எல்லா இடத்திலும் உள்ளது.
சட்டம்-ஒழுங்கு கெட்டுப்போய் உள்ளது. நரிக்குறவ பெண்ணான அஷ்வினிக்கு வீடுகட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த செக் செல்லாமல் போய்விட்டது. நரிக்குறவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், பொதுக்கூட்ட மேடையில் அண்ணாமலை பேசிக் கொண்டிருக்கும் போது நரிக்குறவ மக்கள் அவருக்கு பாசி மணி அணிவித்தனர். அப்போது, நரிக் குறவர் சமுதாயத்தை மத்திய அரசு விரைவில் எஸ்.டி பிரிவில் சேர்க்கவுள்ளதாக அண்ணாமலை தெரிவித்தார்.