3 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச்சென்று செல்போன் பறிப்பு கொள்ளையனை மடக்கிப்பிடித்த போலீசார்


3 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச்சென்று செல்போன் பறிப்பு கொள்ளையனை மடக்கிப்பிடித்த போலீசார்
x

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் 3 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச்சென்று செல்போன் பறிப்பு கொள்ளையனை மடக்கிப்பிடித்த போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

சென்னை

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நேற்று முன்தினம் மாலை சாலையில் நடந்து சென்ற சுதீப் முகர்ஜி என்ற வாலிபரிடமும், 17 வயது சிறுவனிடமும் அடுத்தடுத்து செல்போன்களை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் 2 கொள்ளையர்கள் தப்பிச்சென்றனர். அவர்களை அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த போலீசார் இருவர் விரட்டிச்சென்றனர்.

சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச்சென்று கொள்ளையர்களில் ஒருவரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். இன்னொரு கொள்ளையன் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட கொள்ளையன் பெயர் விவேக் (வயது 27). தேனாம்பேட்டையைச்சேர்ந்தவர். அவரை ஆயிரம்விளக்கு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 செல்போன்கள் மீட்கப்பட்டது. அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், வேளச்சேரியில் திருடியது, என்பது தெரிய வந்தது. மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

தப்பி ஓடிய கொள்ளையன் பெயர் விஷ்ணு என்பதாகும். போரூரைச் சேர்ந்த அவரை போலீசார் தேடி வருகிறார்கள். 3 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச்சென்று கொள்ளையன் விவேக்கை பிடித்த போலீஸ்காரர்கள் பெயர் தினேஷ், சரவணன் என்பதாகும். இருவரும் அபிராமபுரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.


Next Story