காஞ்சீபுரத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க வந்த தாசில்தாரை முற்றுகையிட்ட பொதுமக்கள்


காஞ்சீபுரத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க வந்த தாசில்தாரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x

காஞ்சீபுரத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க வந்த தாசில்தாரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த கரசங்கால் பகுதியில் சாலை ஓரம் 41 நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சாலை ஒரம் வசித்து வரும் நரிக்குறவர்களுக்கு தலா 2 சென்ட் என்ற அளவில் வீடு கட்டுவதற்கு செரப்பனஞ்சேரி ஊராட்சியில் 82 சென்ட் அரசு நிலம் ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்நிலையில் நரிக்குறவர்களுக்கு வீடு கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடம் மற்றும் அப்பகுதியில் உள்ள இடங்கள் ஏற்கனவே ஆக்கிரமித்து வீடுகளை கட்டியிருந்தனர். இதனால் குன்றத்தூர் தாசில்தார் கல்யாணசுந்தரம் தலைமையில் வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நரிக்குறவர்களுக்கு வீடு கட்ட அரசு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை அளவிடும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தை போலீசார் முன்னிலையில் கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அப்பகுதி மக்கள் நிலம் கையகப்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தாசில்தார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தை வருவாய் துறையினர் மீட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story