ரெயில் விபத்துக்கு பொறுப்பேற்று ரெயில்வே மந்திரி பதவி விலக வேண்டும்"- திருமாவளவன் எம்.பி பேட்டி!


ரெயில் விபத்துக்கு பொறுப்பேற்று ரெயில்வே மந்திரி பதவி விலக வேண்டும்- திருமாவளவன் எம்.பி பேட்டி!
x

ஒடிசா ரெயில் விபத்து மிகவும் வேதனை அளிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. கூறியுள்ளார்.

மதுரை,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒடிசா ரெயில் விபத்து மிகவும் வருத்தத்திற்குறியது. வேதனை அளிக்கிறது. இந்த விபத்துக்கு காரணம் அதிநவீன பாதுகாப்பு கருவிகள் சரியாக இயங்காதது தான். இது இந்தியாவிற்கு பெரும் தலைகுனிவு. இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும். அப்படி விசாரிக்கும் போது தற்போதைய ரெயில்வே அமைச்சர் பதவியில் இருந்தால் அந்த விசாரணைக்கு இடையூறாக இருக்கும்.

எனவே இந்த விபத்திற்கு தார்மீக பொறுப்பேற்று ரெயில்வே அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். மத்திய அரசு ரெயில்வே துறை, விமானத்துறை, மின்சாரத்துறை போன்ற அரசு பொதுத்துறைகளை தனியாருக்கு தாரைவாக்கும் நோக்கில் செயல்படுகிறது. அதனால் தான் சரியான முறையில் அதிநவீன பாதுகாப்பு கருவிகளை பராமரிக்கவில்லை.

இந்த ரெயில் விபத்து நடைபெற்ற உடனே தமிழக அரசு இரண்டு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை ஒடிசா மாநிலத்திற்கு அனுப்பி வைத்து நிலைமையை கண்டறிந்து உதவிகள் செய்திருக்கிறது. மேலும் தமிழக முதல்வர் இந்த நாளை துக்க நாளாக அனுசரித்து அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து இருக்கிறார். சென்னை சென்ட்ரல் ரெயில் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு சென்று நிலைமைகளை நேரில் ஆய்வு செய்திருக்கிறார். இதை விடுதலை சிறுத்தைகள் கட்சி பாராட்டுகிறது.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையே உயர் நீதிமன்றம் உறுதி செய்து இருக்கிறது. இந்த வழக்கில் அனைத்து சாட்சிகளும் பிறழ் சாட்சிகளாக மாறிய நிலையிலும், அதிநவீன தகவல் தொழில்நுட்பத்தை வைத்து, அதில் உள்ள தகவல்களை வைத்து வாதாடி உரிய நீதி பெற்று தந்த வழக்கறிஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற ஆணவ படுகொலைகளை தடுக்க தமிழக அரசு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர் கோவில் திருவிழாவில் தலித் மக்கள் தாக்கப்பட்டதை கண்டிக்கிறோம். மதுரை சுற்றுப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தலித் மக்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். அதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த தாக்குதல்களை கண்டித்து வருகிற 12-ந் தேதி மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story