எண்ணூரில் வாயுக்கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவு


எண்ணூரில் வாயுக்கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 27 Dec 2023 4:59 AM GMT (Updated: 27 Dec 2023 5:08 AM GMT)

வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை,

சென்னை எண்ணூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் கோரமண்டல் உரத்தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு கப்பல் மூலம் திரவ அமோனியா எடுத்துவர ஏதுவாக கடலில் இருந்து தொழிற்சாலைவரை குழாய் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தொழிற்சாலையில் இருந்து நள்ளிரவு 12 மணியளவில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. வாயுக்கசிவால் தொழிற்சாலைக்கு அருகில் வசித்து வந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன. வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உரத்தொழிற்சாலைக்கு திரவ அமோனியா எடுத்துவரும் குழாயில் அமோனியா வாயு கசிந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்தது. இதையடுத்து, குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்து இனி தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் ஒப்புதலோடு மட்டுமே குழாயை இயக்க வேண்டுமென மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், எண்ணூரில் வாயுக்கசிவு ஏற்பட்ட கோரமண்டல் உரத்தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் வாயுக்கசிவு தொடர்பாக ஆய்வுக்குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கோரமண்டல் உரத்தொழிற்சாலையில் இன்று ஆய்வு செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. அமோனியா ரசாயனம் காற்றில் கலந்ததால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.


Next Story