மனைவியை திட்டியதால் ஆத்திரம்: தாயின் வாயில் கத்தியால் குத்திய வாலிபர்


மனைவியை திட்டியதால் ஆத்திரம்: தாயின் வாயில் கத்தியால் குத்திய வாலிபர்
x

நாகை அருகே மனைவியை திட்டியதால் ஆத்திரம் அடைந்த வாலிபர் தனது தாயின் வாயில் கத்தியால் குத்தினார்.

நாகை:

நாகை மாவட்டம் திருமருகல் அருகே ஏனங்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் வீரமோகன். இவருடைய மனைவி கஸ்தூரி (வயது 48). இவர்களுடைய மகன் ஸ்ரீகாந்த் (26). இவருடைய மனைவி வினோதா (24).

சம்பவத்தன்று கஸ்தூரி தனது மருமகள் வினோதாவிடம் மதிய உணவு கேட்டதாக தெரிகிறது. அதற்கு வினோதா, மாமியாரை திட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கஸ்தூரி தனது மகன் ஸ்ரீகாந்திடம் தெரிவித்துள்ளார். இதனால் தாய்க்கும், மகனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீகாந்த், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து தனது தாய் கஸ்தூரியின் வாயில் குத்தி உள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து திருக்கண்ணப்புரம் போலீசில் கஸ்தூரி கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இரணியன் மற்றும் போலீசார், ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி வினோதா ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story