தமிழக தொழில் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலாக உலக முதலீட்டாளர் மாநாடு அமையும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


தமிழக தொழில் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலாக உலக முதலீட்டாளர் மாநாடு அமையும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 8 Jan 2024 11:48 AM GMT (Updated: 8 Jan 2024 12:18 PM GMT)

உலக முதலீட்டாளர் மாநாட்டில் எதிர்பார்த்ததைவிட அதிக முதலீடு கிடைத்துள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை நந்தம்பாக்கத்தில் 2 நாள் உலக முதலீட்டாளர் மாநாடு நிறைவு விழா நடைபெற்று வருகிறது. இந்த நிறைவு நாள் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொழில் நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. உலக முதலீட்டாளர் மாநாட்டு நிறைவு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியபோது கூறியதாவது:-

உலகமே வியக்கும் வண்ணம் முதலீட்டாளர் மாநாடு நடத்தி இதயத்தில் இடம்பிடித்து விட்டார் டி.ஆர்.பி ராஜா. இதுவரை 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். 27 தொழிற்சாலைகளை திறந்து வைத்துள்ளேன். உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் ரூ.6,64,180 கோடி முதலீடு கிடைக்கப்பெற உள்ளன. உலக முதலீட்டாளர் மாநாட்டில் எதிர்பார்த்ததைவிட அதிக முதலீடு கிடைத்துள்ளது.

இந்த புதிய முதலீடுகள் மூலம் 14 லட்சத்து 54 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். தமிழக தொழில் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலாக உலக முதலீட்டாளர் மாநாடு அமையும். சென்னையில் நடந்த 2 நாள் உலக முதலீட்டாளர் மாநாட்டின் மகத்துவம் என்றென்றும் பேசப்படும். இந்த முதலீட்டாளர் மாநாட்டில் தமிழகத்தின் 20 ஆண்டு கால வளர்ச்சிக்கு அடித்தளமிடப்பட்டுள்ளது. முதலீடுகள் தொடர்ந்து செயல்வடிவம் பெறுவதை கண்காணிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story