வங்கி அதிகாரி போல் பேசி என்ஜினீயரிடம் ரூ.10 லட்சம் நூதன திருட்டு


வங்கி அதிகாரி போல் பேசி என்ஜினீயரிடம் ரூ.10 லட்சம் நூதன திருட்டு
x

வங்கி அதிகாரி போல் பேசி என்ஜினீயரிடம் ரூ.10 லட்சத்தை மர்மநபர் நூதன முறையில் திருடிச்சென்று விட்டார்.

சென்னை

சென்னை விருகம்பாக்கம், ஆற்காடு சாலை அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பத்ரி நாராயணன் (வயது 40). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், அமெரிக்காவில் வேலை செய்து வந்தார். இவருடைய தாய் மல்லிகாவை பார்ப்பதற்காக கடந்த டிசம்பர் மாதம் பத்ரி நாராயணன் தனது குடும்பத்துடன் சென்னை வந்தார்.

வீட்டின் அருகே உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க சென்ற பத்ரி நாராயணன், அவரது ஏ.டி.எம். கார்டின் ரகசிய குறியீட்டு எண்ணை தவறாக பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது ஏ.டி.எம். கார்டு பிளாக் செய்யப்பட்டது.

சிறிது நேரத்தில் பத்ரி நாராயணனின் செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய ஆசாமி, "வங்கி சேவை மையத்தில் இருந்து அதிகாரி பேசுவதாகவும், ஏ.டி.எம். கார்டை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என்றும் கூறி பத்ரி நாராயணனின் ஏ.டி.எம். கார்டு விவரங்களை கேட்டார்.

தனது ஏ.டி.எம். கார்டு ஏற்கனவே பிளாக் செய்யப்பட்டதால் இதனை உண்மை என்று நம்பிய அவர், தனது கார்டு எண் விவரங்களை அந்த மர்ம நபரிடம் கூறினார்.

உடனே அவரது செல்போனுக்கு 'லிங்க்' ஒன்றையும் மர்மநபர் அனுப்பி வைத்தார். அந்த 'லிங்க்கை' பத்ரி நாராயணன் பயன்படுத்திய சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து அடுத்தடுத்து 3 தவணைகளாக மொத்தம் ரூ.10 லட்சம் எடுக்கப்பட்டதாக அவரது செல்போனுக்கு குறுந்தகவல் வந்ததை கண்டு பத்ரி நாராயணன் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வங்கிக்கு நேரில் சென்று விசாரித்தார். அப்போது வங்கி சேவை மையத்தில் இருந்து அதுபோல் யாரும் பேசவில்லை என்றும், மர்மநபர் தன்னிடம் வங்கி அதிகாரி போல் பேசி நூதன முறையில் பணத்தை சுருட்டியதும் தெரியவந்தது.

இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story